தென் மாநிலங்களில் வான் வழி தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்!
'ரா' மற்றும் 'ஐ.பி' ஆகியவை மத்திய உள்துறையிடம் கொடுத்துள்ள எச்சரிக்கை ரிப்போர்ட்டில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் யாரும் எதிர்பாராத வகையில் கடல் வழியே வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் இப்போது வான்வெளித் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக தென் மாநிலங்களுக்கு குறி வைத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பினரின் வயர்லெஸ் தொடர்புகளை உளவு அமைப்பான இன்டெலிஜென்ஸ் பீரோ இடைமறித்துக் கேட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன.
லஷ்கர் அமைப்பின் தொலைத்தொடர்புப் பிரிவின் தலைவரான சகார் ஷா, தென் மாநிலங்களில் இயக்கப்படும் தனியார் விமான, ஹெலிகாப்டர் சர்வீஸ்கள் குறித்த தகவல்களைத் திரட்ட ஆரம்பித்துள்ளார். விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து அவற்றைக் கொண்டு பயங்கர தற்கொலைத் தாக்குதலை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக தென் மாநில விமான நிலையங்கள், அணு மின் நிலையங்கள், இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விராட் (இது பெரும்பாலும் விசாகபட்டிணம், கொச்சி, சென்னை, மும்பை பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்), விசாகபட்டிணம் கடற்படைத் தளம், கொச்சி துறைமுகம் ஆகியவை குறி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள், ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதி்ல், சந்தேகத்துக்குரிய நபர்கள் விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடக்கைக்கு கேட்டு வந்தால் உடனடியாக உள்துறைக்கு தகவல் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.