என்எல்சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு - 26ம் தேதி பாமக உண்ணாவிரதம்
சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26ம் தேதி நெய்வேலியில் பாமக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய இருப்பதை கண்டித்தும், ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் பாட்டாளி தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை அரசு மருத்துவமனை எதிரே உள்ள மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
1996-ம் ஆண்டு நெய்வேலி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்குகளை விற்பனை செய்தால் மத்திய அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று கூறினார். இவ்வாறு பகிரங்கமாக சொன்னதின் விளைவாக பங்குகளை விற்பனை செய்வது நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக தனியாக அமைச்சகம் அமைக்கப்பட்டு, இதற்கான வேலையை தொடங்கிவிட்டார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் நெய்வேலி நிறுவனத்திற்கு 20 சதவீத லாபம் கிடைத்துள்ளது. நெய்வேலி நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு இது வரை வேலை கொடுக்கவில்லை. நெய்வேலி நிறுவனத்தின் விரிவாக்க திட்டத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பங்குகளை விற்பனை செய்ய போவதாக கூறுகிறார்கள்.
வளர்ச்சிக்காகவும், விரிவாக்கத்திற்காகவும் பங்குகளை விற்பனை செய்வதாக இருந்தால் பங்குகளை நெய்வேலி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யவேண்டும்.
நிலம் கொடுத்த விவசாயிகள், வேலை கேட்டு அலையும் இளைஞர்களுக்கும் பங்குகளை கொடுங்கள். ஒரு பங்கு ரூ.10 என்றால் வெளி மார்க்கெட்டில் ஒரு பங்கு ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்கிறார்கள். எனவே நெய்வேலி நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அடக்கவிலையான 10 ரூபாய்க்கு பங்குகளை விற்பனை செய்யவேண்டும்.
தொழிலாளர்கள் மற்றும் நிலம் கொடுத்தவர்களை தவிர வேறு யாரையும் பங்குகளை வாங்க அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே 6.5 சதவீதம் பங்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மேலும் 10 சதவீதம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் தனியார் வசம்தான் நிறுவனம் போய்ச்சேரும். அந்த நிலை வரக்கூடாது என்று தான் நாங்கள் போராடுகிறோம்.
10 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து வருகிற 26-ந் தேதி பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் நெய்வேலியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவைப்பதிலோ அல்லது முடித்துவைப்பதிலோ நான் கலந்துகொள்வேன். ஆட்டோ தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடுவோம், குரல் கொடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications