'மேட் இன் இந்தியா': சீன போலி உதிரி பாகங்கள்
சென்னை: மேட் இன் இந்தியா என்ற பெயரிலான, சீனாவில் தயாரிக்கப்பட்ட போலி ஸ்பார்க் பிளக்குகள் பெருமளவில் சென்னை துறைமுகத்தில் சிக்கின.
இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தி பெருமளவிலான பொருட்கள் சீனாவில் போலியாக தயாரிக்கப்பட்டு நமது நாட்டில் புழக்கத்திற்கு விடப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தி சீனாவில் தயாரிக்கப்பட்ட போலி மோட்டார் வாகன உதிரி பாகங்கள் பெருமளவில் சென்னை துறைமுகத்தில் சிக்கியுள்ளன.
இதுகுறித்து சுங்கத் துறை கமிஷனர் சி.ராஜன் கூறுகையில்,
சென்னை பாரிமுனை, பொம்மு செட்டி தெருவில் உள்ள கிருஷ்ணா டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்துக்காக சீனாவில் இருந்து பொருட்கள் கடந்த 18-ந் தேதி இறக்குமதி ஆயின. இந்த பொருட்கள் அனைத்தும் கன்டெய்னர் ஒன்றில் அடைக்கப்பட்டு நூம்பலில் உள்ள ஏ.எஸ்.ஷிப்பிங் என்ற கன்டெய்னர் முனையத்தில் வந்திறங்கின.
அந்த கன்டெய்னரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் என்னென்ன பொருட்கள் கொண்டு வரப்படுகிறது என்பதற்கான ஆவணங்களைப் பார்த்தனர்.
அதில் ஸ்பார்க் பிளக்' உட்பட மோட்டார் வாகன உதிரி பாகங்கள், டார்ச் லைட், லைட்களை பொருத்தும் உபகரணங்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
அதில் 2 லட்சம் ஸ்பார்க் பிளக்குகள் காணப்பட்டன. இவை பெரும்பாலும் 2 சக்கர வாகனங்களுக்கு உபயோகப்படுத்துபவை ஆகும். இந்த பிளக்குகளை சற்று உன்னிப்பாக பார்க்கும் போது, அவற்றின் மீது மைக்கோ-மேட் இன் இந்தியா என்று எழுதப்பட்டு இருந்தது. இது சந்தேகத்தைக் கிளப்பியது.
இதை சரிபார்ப்பதற்காக பெங்களூரில் உள்ள மைக்கோ கம்பெனியை அணுகி இதுபற்றி கேட்டோம். அவர்கள் உடனே வந்து இந்த பொருட்களை சரிபார்த்தனர். இது அவர்கள் தயாரிப்பு இல்லை என்றும் யாரோ சீனாவில் மைக்கோ நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரித்து அங்கிருந்து இறக்குமதி செய்துள்ளனர் என்று கூறினர்.
எனவே அவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தோம். கிருஷ்ணா டிரேடர்ஸ் நிறுவனத்தாரிடம் விசாரணை நடத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். அவர்கள் யாரும் இதுவரை வரவில்லை. சென்னையில் அவர்கள் இல்லை என்று கூறப்பட்டது. மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்.
இந்த 2 லட்சம் ஸ்பார்க் பிளக்கில் 1.5 லட்சம் பிளக்குகள் சிறியவை, 50 ஆயிரம் பிளக்குகள் பெரியவை. இதுவரை நாங்கள் ஸ்பார்க் பிளக்குகளை கைப்பற்றியதில்லை. இந்த அளவில் ஸ்பார்க் பிளக்குகளை கைப்பற்றியது இதுவே முதல்முறை.
பிடிபட்ட இந்த பொருட்களின் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாயாகும். இவற்றை குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு அழித்து விடுவோம். இந்த பொருட்களை இறக்குமதி செய்தது தொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மீது மைக்கோ நிறுவனத்தாரும் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
மைக்கோ கம்பெனி பெயரை உபயோகித்தது ஒரு தவறு. அதை விட முக்கியமாக மேட் இன் இந்தியா என்று சீனாவில் தயாரித்தது இன்னொரு தவறு.
இப்படி இந்திய பொருட்களை போலியாக தயாரித்து இந்தியாவுக்குள் புழக்கத்தில் விட்டால், இங்குள்ள நிறுவனங்களின் பெயர் கெடுவது மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தில் இது பாதித்துவிடும்.
சற்று விலை கூடுதலாக இருந்தாலும் நம் நாட்டு பொருட்கள் தரமானவை. எனவே இந்த மோசடியைத் தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்றார் அவர்.