ரூ. 1 லட்சம் கள்ள நோட்டு-அதிர்ந்த ரிசர்வ் வங்கி
சென்னை: சென்னை டாஸ்மாக் மதுக் கடையில் வசூலான பணத்தில் ரூ. 1 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியமேடு டாஸ்மாக் கடைக்கு சில நாட்களுக்கு முன்பு முகம்மது அம்ருதீன் என்பவர் வந்தார். ஜார்க்கண்டைச் சேர்ந்த அவர் ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்து சரக்கு வாங்கினார்.
இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கிறாரே என்ற சந்தேகத்தில் போலீஸாருக்குத் தகவல் போனது. அவர் கொடுத்தது கள்ள நோட்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
ஆனால் வங்கியில் இந்தப் பணத்தைக் காட்டிய போலீஸார், அத்தனையும் நல்ல நோட்டுத்தான் என்று கூறியதைத் தொடர்ந்து கடைக்காரர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்து அனுப்பினர்.
ஆனால் தற்போது இந்தப் பணம் பக்கா கள்ள நோட்டு என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளமே காண முடியாத அளவுக்கு இந்த கள்ள நோட்டுக்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த கள்ள நோட்டு விவகாரம் குறித்து சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்படவுள்ளது. இந்த கள்ள நோட்டுக்களை அச்சடித்தது யார், எங்கு அச்சடிக்கப்பட்டது என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர்.