மின் கட்டணம்-ரிலையன்சுக்கு எதிராக சிவசேனா
மும்பை: மகாராஷ்ட்ராவில் மின்சார வழங்களில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் தன்னிச்சையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து களமிறங்கியுள்ளது சிவசேனா.
ஆர்ப்பாட்டத்தின்போது மும்பை கண்டிவாலியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவன அலுவலகம் எதிரே, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ட்ரக் ஒன்றை எரித்தனர் சிவசேனா ஊழியர்கள்.
"இன்று நடைபெற்றுள்ள போராட்டம் ஒரு ஆரம்பம்தான். மின் கட்டணத்தைக் குறைக்காவிட்டால் நிச்சயம் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்" என சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவட் தெரிவித்தார்.
இன்னொரு பக்கம், "உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திருப்பிச் செலுத்தாதீர்கள்" என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா அறிவித்துள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கு ரிலையன்ஸ் எனர்ஜி, பெஸ்ட், டாடா மற்றும் மஹாவிதரன் ஆகிய நிறுவனங்கள் மின்சாரம் வழங்கி வருகின்றன. இவை அனைத்துமே ஒரு சேர மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.