செய்யூர் மின் திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை
டெல்லி: 4,000 அல்டா மெகாவாட் திறன் கொண்ட செய்யூர் அனல் மின் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் கலந்து கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் வீராசாமி.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் மின் திட்டங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வீராசாமி பேசுகையில்,
செய்யூரில் 4 ஆயிரம் அல்ட்ரா மெகாவாட் மின்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒதுக்கி விட்டது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மின்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
தற்பொழுது தமிழகத்தில் சுமார் 1500 மெகாவாட் மின்சார பற்றாக்குறை உள்ளது. இதனை காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்தி செய்து வருகிறோம்.
கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம், வரும் டிசம்பர் மாதம் முதல், தமிழகத்துக்கு கூடுதலாக 460 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
மேலும் அடுத்த ஆண்டு (2010) அக்டோபர் மாதம் முதல் தமிழகத்துக்கு கூடுதலாக 1100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதில் வல்லூர் மின் திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரமும், வடசென்னை மின்திட்டம் மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும். இவற்றின் மூலம் தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறையை தீர்க்க முடியும்.
தமிழகத்தில் கூடுதலாக மின்சாரம் தயாரிக்க தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது.
மத்திய அரசின் புதிய மின்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் மின்சார உற்பத்தி, உற்பத்தியான மின்சாரத்தை கொண்டு செல்வது மற்றும் வினியோகம் போன்றவைகளை பிரித்து தனியாக நடைமுறைப்படுத்தினால்தான் மத்திய அரசின் நிதி உதவி மற்றும் மானியங்கள் கிடைக்கும்.
இந்த நடைமுறையை கேரளாவும் தமிழகத்தையும் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் அமல்படுத்திவிட்டன. தமிழ்நாட்டிலும் இந்த நடைமுறை இன்னும் 6 மாதங்களில் அமல்படுத்தப்பட்டுவிடும். தமிழக மின்வாரியத்தை தலைமையகமாக கொண்டு இரண்டு புதிய நிறுவனங்களை தொடங்கி பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பருவ மழை காரணமாக தமிழகத்தில் உள்ள குந்தா, பைகாரா, பாபநாசம், போன்ற நீர்நிலைகளில் போதுமான நீர் கிடைக்குமானால், அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தேவையான நீர்மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளதால் கோடை காலத்தில் மின் வெட்டு வராது. பருவ மழை பெய்யவில்லை என்றால், 1500 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், கடந்த ஆண்டில் நடைமுறையில் இருந்த மின்வெட்டு போல் அமல்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றார் அவர்.