நான் விலகினாலும் கட்சி நடக்கணும்-சிரஞ்சீவி
ஹைதராபாத்: பிரஜா ராஜ்யம் கட்சியிலிருந்து யார் விலகினாலும் கவலையில்லை. கட்சி தானாக நடக்கும். நானே விலகினாலும்கூட கட்சி நடக்கணும் என்கிறார் நடிகர் சிரஞ்சீவி.
மேலும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று காலை ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் கட்சி தொடங்க காரணமாக இருந்தவர் டாக்டர் மித்ரா. அவர் இப்போது பிரஜா ராஜ்யம் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
சில சொந்த காரணங்களுக்காக அவர் காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகி இருப்பார். இது கட்சிக்கு இழப்பு என்று சொல்ல முடியாது. நானே கட்சியில் இருந்து விலகினாலும் கட்சி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
இந்தக் கட்சிக்கு யாரும் வரலாம்... போகலாம்.
நான் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டேன். வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயார்.
ஆகஸ்டு 26-ந்தேதியுடன் கட்சி தொடங்கி 1 வருடம் ஆகப்போகிறது. இதை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். முதல் ஆண்டிலேயே பிரஜா ராஜ்யத்துக்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகத்தானது.
மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவை நான் எதிர்க்கிறேன். இதை தீவிரவாதமாகப் பார்க்காமல் சமூகப் பிரச்சினையாக ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும்... " என்றார்.