டெல்லியில் அடுத்தடுத்து கற்பழிப்பு சம்பவங்கள்
டெல்லி: டெல்லியில் அடுத்தடுத்து இரு கற்பழிப்புச் சம்பவங்கள் தலைநகரை உலுக்கியுள்ளன. முதல் கற்பழிப்புச் சம்பவத்தில் போலீஸார் மீதே குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் டெல்லி அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி இந்திரபுரி காவல் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து போலீஸார் சேர்ந்து தன்னை கற்பழித்து விட்டதாக ஒரு பெண் புகார் கூறியுள்ளார்.
இதனால் நிலை குலைந்து போன காவல்துறை இதுகுறித்து விசாரிக்க குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
தலைமறைவான ஒரு புக்கியின் மனைவியை சம்பந்தப்பட்ட இந்திரபுரி காவல் நிலையத்திற்கு விசாரணை என்ற பெயரில் கூட்டி வந்ததாக தெரிகிறது. அங்கு வைத்து அவரது கணவர் குறித்து கேட்டுள்ளனர்.
அப்போது தன்னை ஏட்டு உள்ளிட்ட ஐந்து போலீஸார் கற்பழித்து விட்டதாக அந்தப் பெண் புகார் கூறியுள்ளார்.
இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
கற்பழிப்பிலிருந்து மீண்டு வந்த பின்னர் தனது கணவரைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறியுள்ளார் அப்பெண். இதையடுத்து இருவரும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கிரு்நது போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் காவல் நிலையத்தைத் தாக்கி சூறையாடினர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு பெண்ணும் கற்பழிப்புப் புகார்...
இதற்கிடையே, கிழக்கு டெல்லியில் ஒரு பெண் தன்னை 3 பேர் வீடு புகுந்து கற்பழித்து விட்டதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
22 வயதாகும் அந்தப் பெண்ணின் வீடு போலோநாத் நகரில் உள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை தான் தனது வீட்டில் தனியாக இருந்தபோது தனது கணவரின் நண்பர் உள்ளிட்ட 3 பேர் வீட்டுக்கு வந்ததாகவும், பின்னர் என்னை மிரட்டிக் கற்பழித்து விட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
அவரது கணவர் கூறுகையில், நான் வேலையிலிருந்து இரவு வீடு திரும்பினேன். அப்போது எனது மனைவி மாடியில் அழுதபடி அமர்ந்திருந்தார். என்ன என்று கேட்டபோது நடந்ததைக் கூறினார். இதையடுத்து போலீஸாரை அழைத்தோம் என்றார்.
இரவு பத்து மணிக்குப் புகார் வந்ததாகவும், கற்பழித்த 3 பேரையும் அந்தப் பெண் அடையாளம் கூறியதாகவும், அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து நடந்துள்ள இந்த கற்பழிப்புச் சம்பவங்களால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications