வெள்ளி முதல் மீண்டும் பருவ மழை தொடங்கும்-வானிலை ஆய்வு மையம்
கடலில் நிகழ்ந்து வரும் எதிர்பாராத மாற்றங்கள் (எல் நினோ) காரணமாக ஜூன் மாதத்தில் பெய்திருக்க வேண்டிய தென் மேற்குப் பருவ மழை பொய்த்து விட்டது.
இந்த நிலையில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தென் மேற்குப் பருவ மழை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளி மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளி்ல் இது பொழியும். இந்த மழை ஜூலை 2ம் தேதி வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை ஜூலை 15ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது.
வங்கக் கடலில் தற்போது பருவ மழை பொழிவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. எனவே மீண்டும் மழைப் பொழிவை எதிர்பார்க்கிறோம் என இந்திய வானிலைத்துறை இயக்குநர் பி.பி. யாதவ் தெரிவித்துள்ளார்.
எல் நினோ குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் அஜீத் தியாகி கூறுகையில், பசிபிக் கடலில் கடல் மட்ட வெப்ப நிலை தற்போது 0.5 டிகிரி குறைந்துள்ளது. எனவே எல் நினோவிலும் மாற்றம் தென்படுகிறது என்றார்.