ஆஸி. உயர்மட்ட குழு இந்தியா வருகிறது!
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அந்நாட்டை சேர்ந்த உயர்மட்ட குழு ஒன்று வரும் ஜூலை 4ம் தேதி இந்தியா வரவிருக்கிறது.
சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அங்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு வெகுவாகக் குறைந்துவிட்டது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு படித்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சம். இவர்களில் இந்திய மாணவர்கள் சுமார் 90 ஆயிரம் பேர் இருக்கின்றனர். மேலும், வெளிநாட்டு கல்வித்துறை ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொழிலாகும். இதன்மூலம் அவர்களுக்கு சுமார் ரூ. 67 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது.
இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறையாமல் பார்த்து கொள்ளவும், இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா பாதுகாப்பான இடம் என்பதை உறுதிப்படுத்தவும் ஆஸ்திரேலிய உயர்மட்ட குழு ஒன்று வரும் ஜூலை 4ம் தேதி இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய கல்வித்துறை செயலர் லிசா பவுல் கூறுகையில்,
ஆஸ்திரேலியாவின் ச்ர்வதேச கல்வித்துறை தலைவர் கோலின் வால்டர்ஸ் தலைமையில் உயர்மட்டக் குழு இந்தியா வருகிறது. இந்த குழுவில் பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு, போலீஸ் மற்றும் வெளியுறவு அலுவலகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.
இவர்கள் இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வார்கள். மாநில அரசை மட்டுமல்ல மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்திக்கிறார்கள். அவர்களிடம் ஆஸ்திரேலியா, இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பான நாடாக இருக்கம் என உறுதி அளிப்பார்கள்.
இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆஸ்திரேலியா இந்த உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. ஆஸ்திரேலியா வந்துள்ளவர்கள் எங்களது விருந்தாளிகள். மாணவர்கள் தாக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியர்கள் பொறுமைசாலிகள், திறந்த மனம் படைத்தவர்கள். இது போன்ற தாக்குதல் சம்பவம் இங்குள்ள சூழ்நிலைக்கு முற்றிலும் புதிதானது.
இது போன்ற சம்பவங்கள் இனி ஏற்படாது என்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக நிற்கும். இதன் முதல் கட்டமாக விக்டோரிய மாநில போலீசார் இரவு நீண்ட நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல் சம்பவங்களை பார்த்து கொண்டு அவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை மேலும், உயர்த்த கல்வியின் தரத்தை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் லிசா பவுல்.












Click it and Unblock the Notifications