டெல்லி போலீஸ் கமிஷனராவாரா விஜய்குமார்?
சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜய்குமார், சென்னை மாநகர காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் இருந்தவர்.
பிரதமராக இருந்த ராஜிவின் பாதுகாப்பு அதிகாரியாகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்தவர்.
கேரளத்தைச் சேர்ந்தவரான இவர் ராஜிவ் குடும்பத்துக்கு, குறிப்பாக ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர்.
டெல்லியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சமீபத்தில் இவர் மத்திய அரசுப் பணிக்குப் போய் விட்டார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந் நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனர் பதவிக்கு அவரது பெயர் அடிபடுகிறது.
டெல்லி போலீஸ் கமிஷனர் பதவிக்கான பரிசீலனைப் பட்டியலில் விஜயக்குமார், சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் டி.கே.குப்தா, நிர்வாக சிறப்பு ஆணையர் நீரஜ் குமார் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
இதில் விஜயக்குமாரின் பெயர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் புதிய ஆணையர் யார் என்பது தெரிய வரும்.