மெட்ரிக்: ஒரே நேரத்தில் தேர்வு-அரசு உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் வெவ்வேறு சமயத்தில் தேர்வுகளை நடத்தக் கூடாது. அனைத்துத் தேர்வுகளையும் ஒரே சமயத்தில்தான் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுகளை ஒரே சமயத்தில் நடத்த வேண்டும். ஒரே சமயத்தில் விடுமுறை விட்டு, பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனவும் இந்த கட்டுப்பாடு கூறுகிறது.
தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மாநில மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குநர் அலுவலகத்திற்குக் கட்டுப்பட்டவை. ஒரே பாடத்திட்டம்தான் இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால் காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வுகளையும், விடுமுறைகளையும் இந்தப் பள்ளிகள் தங்களது விருப்பத்திற்கு நடத்தி வருகின்றன.
இதுதவிர அரசு விடுமுறை, விழாக்கால விடுமுறைகளையும் பல பள்ளிகள் முறையாக கடைப்பிடிப்பதில்லை.
இதை விட கொடுமையாக பத்தாவது மற்றும் பிளஸ்டூ படிக்கும் மாணவ, மாணவியருக்கு சனிக்கிழமைகளில் ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் வகுப்புகளை நடத்துகின்றனர்.
மற்ற பள்ளிகளை விட சிறப்பாக தேர்ச்சி பெற வேண்டும், ரேங்க் பெற வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு அதிக அளவிலான படிப்புச் சுமையை ஏற்றுகின்றனர்.
இது பெற்றோர்கள், மாணவ, மாணவியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், வேறு வழியில்லாமல் இதற்கு உடன்பட வேண்டியுள்ளது.
ஆனால் இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகத்தை சரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மெட்ரிக் குலேசன் பள்ளிகளிலும் ஒரே சீரான வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் தேர்வு நாட்களை நடைமுறைக்கு கொண்டு வர மெட்ரிக்குலேசன் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குனர் மணி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் மெட்ரிக் பள்ளிகளின் மொத்த வேலை நாள், தேர்வு நாட்கள், விடுமுறை நாட்கள், பட்டியலிடப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும், மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
பள்ளி திறக்கப்படும் நாள், முடியும் நாள், ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்தும் வகையில் நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உள்ளூர் விடுமுறையாக ஒதுக்கப்பட்ட நாட்களுக்கு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர் முன் அனுமதி பெற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின்படி மெட்ரிக் பள்ளிகளின் மொத்த வேலை நாட்கள் 225 ஆகும். உள்ளூர் விடுமுறை நாட்கள் 5 நாள். இதைக் கழித்தால் மொத்த வேலை நாட்கள் 220 ஆகும்.
காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வுக்கான தேர்வு நாட்கள் 40 நாள் ஆகும். கற்பித்தல் வேலை நாட்கள் 180 ஆகும்.
இதை பின் பற்றாத மெட்ரிக் குலேசன் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குனரகம் தெரி வித்துள்ளது.