தா.பாண்டியன் குறித்து உளவுத்துறை வதந்தி?

தா. பாண்டியன் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், அவரது வீடும் தாக்கப்பட்டதாகவும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியது.
இதைத் தொடர்ந்து சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஏராளமானோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா, தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளர்கள் மகேந்திரன், பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் வதந்தியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் மீது அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறான பொய் வழக்குகள் அண்மைக் காலமாக புனையப்பட்டு வருகின்றன.
இப்போது அவர் குறித்த பல வதந்திகளை உளவுத் துறையினர் திட்டமிட்டு பரப்பி வருவதாகத் தெரிகிறது.
இந்த வதந்திகள் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உரிய முன்னோட்டமாக இருக்கக்கூடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
எனவே இந்தப் பிரச்சனை குறித்து முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications