தேசிய கொடியை ஏற்ற மறுப்பதா?-நீதிபதி கேள்வி
சென்னை: ஜாமீன் நிபந்தனைப்படி தேசிய கொடியை ஏற்ற மாட்டோம் என்று கூறுவதா என்று உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி சரமாரி கேள்விகள் எழுப்பினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக கோவை கலெக்டர் அலுவலகம் முன் கடந்த மாதம் போராட்டம் நடத்திய தமிழர் தேசிய பொதுவுடமை கட்சி, தமிழர் தேசிய இயக்கம் ஆகியவற்றை சேர்ந்த 8 பேர் தேசிய கொடியை எரிக்க முயன்றதாக பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, 8 பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். தேசிய சின்னத்தை மனுதாரர்கள் உணர வேண்டும் என்பதற்காக, 8 பேரும் தங்கள் வீட்டு முன் கொடி கம்பத்தை நட்டு, ஒரு வாரத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
மேலும் அனாதை இல்லத்துக்கு சென்று ஒரு வாரத்திற்கு தினமும் 3 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆனால், இந்த நிபந்தனையை மாற்ற வேண்டும் என்று கோரி தமிழரசன் உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், தினமும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று எங்களை வற்புறுத்த முடியாது என்று கூறியுள்ளனர்.
இந்த மனு மீண்டும் நீதிபதி ரகுபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைராஜ் கூறுகையில், 8 பேரில் 4 பேர் நிபந்தனையை ஏற்று ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். 3 பேர் மட்டும் நிபந்தனைக்கு ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளனர். இன்னொருவர் மனுதாக்கல் செய்யவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த மனுதாரர்களின் வழக்கறிஞர் துரைசாமி, இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக கோர்ட்டு உத்தரவை பின்பற்ற எங்கள் மனசாட்சி அனுமதிக்கவிலை என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதி, இதற்கு என்ன அர்த்தம்? என்று கேட்டார்.
அதற்கு வழக்கறிஞர் துரைசாமி, இலங்கைக்கு, இந்தியா ரூ.2,000 கோடிக்கு மேல் உதவி செய்துள்ளது. அந்த நாட்டு வளர்ச்சிக்காக இது வழங்கவில்லை. எங்களை பொறுத்தவரை தமிழர் படுகொலைக்காக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இது உங்கள் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்றார்.
மீண்டும் பேசிய துரைசாமி,- நாங்கள் கூறும் கருத்துக்கு ஆதாரம் உள்ளது என்றார்.
அப்போது பேசிய நீதிபதி, ஊர்வலம் நடத்த, போராட்டம் நடத்த நாட்டில் உரிமை உள்ளது. ஒரு கையில் தேசிய கொடியையும், மற்றொரு கையில் தீப்பெட்டியையும் வைத்துக் கொண்டு ஏன் போராடினீர்கள்?. பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தைதானே அணுக வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த துரைசாமி, போராட்டம் நடத்த பல்வேறு வடிவங்கள் உள்ளன. தேசிய கொடியை எரிப்பது புதிதானது அல்ல. 1957 முதல் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன என்றார்.
இதனால் கேபாமான நீதிபதி, தேசியக் கொடியை எரிப்பதும், அரசியல் சட்டத்தை எரிப்பதும் புதிதல்ல என்கிறீர்களா? என்று கேட்க, வக்கீல் துரைசாமி, ஆமாம் என்று பதிலளித்தார்.
அரசியல் சட்டத்தை எரித்தவர்கள் யார், அதில் கலந்து கொண்டவர்கள் யார்? என்று நீதிபதி கேட்க,
வக்கீல் துரைசாமி கூறுகையில், 1957ல் அரசியல் சட்டம் எரிப்பு போராட்டம் நடந்தது. தொண்டர்களுக்கு பெரியார் தலைமை தாங்கி நடத்தினார் என்றார்.
இதற்கு நீதிபதி, அப்போது தேசிய கொடி அவமதிப்பு சட்டம் அமலில் இல்லை. தேசிய கொடியை ஏற்றும் உரிமை எந்த முதல்வருக்கும் இல்லாத நிலை இருந்து வந்தது. தற்போதைய முதல்வர் தான் (கருணாநிதி) போராடி, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றார். இது பெருமைக்குரியது. இந்தியாவில் நீங்கள் வசிக்கும்வரை இந்திய சட்டங்களையும், அரசியல் சட்டத்தையும் பின்பற்ற கடமை உள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த துரைசாமி,- சட்டத்தையும் அரசியல் சட்டத்தையும் மதிக்க நாங்கள் கடமைப்பட்டவர்கள்தான். ஆனால் எங்கள் விருப்பத்துக்கு எதிராக சில செயல்களை செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதை நானாக நிபந்தனை விதிக்கவில்லை. மனுதாரர்களின் வக்கீல் ஒப்புதலோடுதான் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனையை ஏற்று 4 பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். 3 பேர் தான் எதிர்க்கிறார்கள் என்றார்.
இதற்கு துரைசாமி, 3 பேரும் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவை நாங்கள் நிறைவேற்றாமல் இருக்க விரும்பவில்லை. அதே சமயம் எங்கள் அடிப்படை உரிமைக்கு எதிராக இருப்பதால் தான் எதிர்க்கிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ரகுபதி, ஜாமீன் அளிப்பதும், முன்ஜாமீன் அளிப்பதும் கோர்ட்டு உரிமையாகும். நிபந்தனையுடன் ஜாமீனில் வெளிவர விரும்புகிறீர்களா? அல்லது வழக்கு விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க விரும்புகிறீர்களா?. சமீபத்தில் ராணுவ வாகனங்கள் கூட தாக்கப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறி மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications