கோவில் நிலங்கள் விற்பனைக்கு..!: அமைச்சர்
சென்னை: அறநிலையத் துறைக்குப் பயன்படாத நிலங்களை, சந்தை விலை கொடுத்து அரசின் பிற துறைகள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை தனியாருக்குத் தருவதில்லை. அதேசமயம், அரசுத் துறைகளுக்குத் தேவையான நிலங்கள் சந்தை விலையில் அளிக்கப்படுகின்றன.
அதுபோன்று, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் மின்வாரியம், பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிலங்களை சந்தை விலை கொடுத்து அரசுத் துறைகள் வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
அம்பை எய்தது யார்?:
பள்ளிகளைத் தரம் உயர்த்துவது தொடர்பாக சட்டசபையில் வேலூர் எம்எல்ஏ ஞானசேகரன் ஒரு கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், தொகுதி மறுசீரமைப்பைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்துக்குள் 13 பேரவைத் தொகுதிகள் வருகின்றன. ஆனால், நான்கு பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தது 15 பள்ளிகளாவது தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்த அம்பை (ஞானசேகரனை) எய்தது யார் என்பது எனக்குத் தெரியும் என்றார், அமைச்சர் துரைமுருகனைப் பார்த்தபடி (துரைமுருகனும் ஞானசேகரனும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
இந் நிலையில் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே இந்தக் கோரிக்கையை துரைமுருகன் வலியுறுத்த, "இப்போது தெரிகிறதா? யார் அம்பை எய்தது'' என்று தென்னரசு கூற முதல்வர் உள்பட அவையில் அனைவரும் சிரித்துவிட்டனர்.
தலைமைச் செயலகம் கட்ட தனியார் சிமெண்ட்!?:
பொதுப் பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ விஜயகுமார்,
புதிய சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம் கட்டும் பணிகளுக்கு அரசு ஆலைகளில் சிமெண்ட் வாங்காமல் தனியார் ஆலைகளிடம் வாங்குவதாகத் தெரிகிறது. அரசு கட்டடங்களுக்கு அரசு ஆலையில் சிமெண்ட் வாங்க வேண்டும் என்ற விதி ஏன் மீறப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications