3 பேர் கொலை வழக்கில் வாலிபருக்கு 72 ஆண்டு, 5 பேருக்கு 62 ஆண்டு சிறை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 72 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே வழக்கில் 5 பேருக்கு தலா 62 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டான் கக்கன்நகரைச் சேர்ந்தவர் மாயாஜான் (வயது 32). அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதியன்று மாயாஜான் அவரது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆத்தூரைச் சேர்ந்த சோமசுந்தரம் (37), தண்டுபத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி (27), கொழுவைநல்லூரைச் சேர்ந்த சங்கர், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த முருகன் என்ற வேல்முருகன் (26), முத்துராமன் (20), முத்துராஜ் (20) ஆகிய 6 பேர் சேர்ந்து மாயாஜானை வெட்டிக் கொன்றனர்.
பின்னர் மாயாஜானின் வீட்டுக்கு சென்ற அக்கும்பல் அங்கிருந்த அவரது அண்ணன் அந்தோணி, அந்தோணியின் மகன் திணேஷ் (10 வயது) ஆகியோரையும் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்றனர்.
இது குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி 2வது விரைவு நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது.
நீதிபதி எஸ்.சாத்தப்பிள்ளை அளித்த தீர்ப்பில், சோமு என்ற சோமசுந்தரத்துக்கு கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 3 ஆயுள் தண்டனை உள்பட 72 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். கூடவே ரூ.6,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
சுந்தரபாண்டி, சங்கர், முருகன் என்ற வேல்முருகன், முத்துராமன், முத்துராஜ் ஆகிய 5 பேருக்கும் கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 3 ஆயுள்தண்டனை உள்பட 62 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தார்.
இந்தத் தண்டனைக் காலத்தை அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த பரபரப்பு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications