குஷ்டரோகி கையில் வெண்ணெய்-வைகோ
திண்டுக்கல்: பணபலத்தால் திமுக கூட்டணி தேர்தலில் பெற்ற வெற்றி குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய் போன்றது. ஆனால், எங்களதோ விவசாயிகளின் கையில் இருக்கும் கொம்புதேன் போன்றது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திண்டுக்கலில் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்,
தேர்தல் தோல்வியால் மதிமுக தொண்டர்களிடம் சோர்வு இல்லை. அதை விட கடந்த 1993ல் ஏற்பட்டது போன்ற எழுச்சி தான் தெரிகிறது. எந்த சூழ்நிலையிலும் மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
பணத்தால் திமுக கூட்டணி பெற்ற வெற்றி, குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணெய் போன்றது. எங்கள் வெற்றியோவிவசாயிகளின் கையில் இருக்கும் கொம்புத்தேன். திருச்சியில் அண்ணாத்துரை நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. அதில் திரளாக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்.
ஈழப்பிரச்னை நகர மக்களுக்கு தெரிந்த அளவிற்கு, கிராமமக்களுக்கு தெரியவில்லை. கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இனி 10 ஆயிரம் கோடி செலவழித்தாலும் திமுக வெற்றி பெற முடியாது.
இலங்கைக்கு ஆயுதங்களை கொடுத்து தமிழர்களை கொல்ல இந்தியா தான் உதவியது. இதை கண்டிக்காத கருணாநிதி, தமிழன துரோகியாகி விட்டார். பிரபாகரன் விரைவில் வெளி வருவார். ஆனால், சில பத்திரிகைகள் தொடர்ந்து அவரைப் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
மதிமுக ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல. மின்தட்டுப்பாடு, முல்லைபெரியாறு, நெய்வேலி தொழிலாளர்கள் என மக்கள் பிரச்னைக்கு போராடி வருகின்றது என்றார் வைகோ.