இலங்கைக்கு உலக வங்கி 24 மில்லியன் டாலர் கடன்
வாஷிங்டன்: சர்வதேச நிதியம், இலங்கைக்கு கடன் வழங்க யோசித்து வரும் நிலையில், உலக வங்கி 24 மில்லியன் டாலர் கடனுதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எப்) பெருமளவிலான கடனுதவி கோரி விண்ணப்பித்திருந்தது இலங்கை. ஆனால் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த நிலையில் இலங்கைக்கு கடனுதவி அளிக்கக் கூடாது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிர்ப்பந்தம் செய்து வந்தன.
இதனால் கடனுதவி வழங்காமல் தாமதம் செய்து வருகிறது சர்வதேச நிதியம்.
இந்த நிலையில் இலங்கைக்கு 24 மில்லியன் டாலர் கடனுதவியை அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் சுகாதாரப் பிரிவை சீரமைக்க இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறதாம்.
போரிலிருந்து மீண்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறப்பு சுகாதார சேவைகளை மேற்கொள்ள இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வழங்கப்படும் நிதியில் 12 மில்லியன் டாலர் பணம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் எனவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இலங்கைக்கான உலக வங்கி இயக்குநர் நவோகா இஷி கூறுகையில், போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து இலங்கை மீள உலக வங்கி செய்யும் சேவை இது என்றார்.