சரப்ஜித் கருணை மனு-பாக் கோர்ட் நிராகரிப்பு
இஸ்லாமாபாத்: மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தியர் சரப்ஜித் சிங் தாக்கல் செய்திருந்த கருணை மறு ஆய்வு மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்து விட்டது. இதனால் சரப்ஜித் சிங்கின் நிலை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
லாகூரில் 1990ம் ஆண்டு நடந்த நான்கு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புள்ளதாகவும், அதில் 14 பேர் பலியாக காரணமாக இருந்ததாகவும் கூறி கடந்த 1991ம் ஆண்டு பாகிஸ்தான் கோர்ட் சரப்ஜித் சிங்குக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்கை தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியத் தரப்பிலிருந்து சரப்ஜித் சிங்கைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னாள் அதிபர் முஷாரப் காலத்தில், இந்தியத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
கடைசியாக ஏப்ரல் 30ம் தேதி சரப்ஜித்தை தூக்கிலிட திட்டமிடப்பட்டது. அப்போது இந்தியா மீண்டும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பிரதமர் யூசுப் ரஸா கிலானி
தலையிட்டு தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தார்.
மேலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும் உத்தரவு ஒன்றையும் பாகிஸ்தான் அரசு தப்பியது. இதனால் சரப்ஜித் சிங் உயிர் தப்பும் வாய்ப்பு உருவானது.
இந்த நிலையில், தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதை ரத்து செய்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மறு ஆய்வு மனு ஒன்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சரப்ஜித் சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி ராஜா பயஸ் அகமது தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரித்து இன்று அதை நிராகரித்து உத்தரவிட்டது. மேலும், தீவிரவாத தடுப்புக் கோர்ட் சரப்ஜித் சிங்குக்கு விதித்த தண்டனையை உறுதியும் செய்துள்ளது.
சரப்ஜித் சிங் சார்பில் ஆஜராக வேண்டிய வக்கீல், கடந்த சில வாய்தாக்களாக ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட்.
சரப்ஜித் சிங் சார்பாக வக்கீலாக நியமிக்கப்பட்டவர் ரானா அப்துல் ஹமீத். இவர் கடந்த ஆண்டு பஞ்சாப் மாகாண அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டு விட்டதால் சரப்ஜித் சிங் வழக்கில் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் சரப்ஜித் சிங்கின் உயிர் கேள்விக்குறியாகியுள்ளது.