அமைச்சர்கள் நேரு-பெரியசாமி-மணி விடுதலையை எதிர்த்து வழக்கு
மதுரை: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ.பெரியசாமி, கோ.சி.மணி விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 11 -ம் தேதிக்கு சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை தள்ளிவைத்தது.
தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ.பெரியசாமி, கோ.சி.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது, அதிக அளவில் சொத்து குவித்ததாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது லஞ்ச
ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த அந்தந்த மாவட்ட விசாரணை நீதி மன்றங்கள் அவர்களை விடுதலை செய்தது.
இதை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதைப் பரிசீலித்த நீதிபதி, வழக்குக்கு சம்பந்தம் இல்லாத மூன்றாம் தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா? என்பது குறித்து ஆகஸ்ட் 11- ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார்.