டாக்டர் கொலை-குற்றவாளிகள் பிடிபடுவர்: கருணாநிதி
சென்னை: திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை போலீசார் விரைவில் கண்டுபிடிப்பார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டசபையில் இன்று இது தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதிமுக எம்எல்ஏ தேன்மொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி ஆகியோர் பேசுகையில், இந்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், போலீசார் காலம் தாழ்த்துவதைப் பார்த்தால் அவர்களே மீதே சந்தேகம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதில்:
திண்டுக்கல்லில் நடந்த டாக்டர் பாஸ்கரன் கொலை சம்பவம் தொடர்பாக என்னிடம் துணை முதல்வர் ஸ்டாலின் எடுத்துச் சொல்லி தீவிர புலன் விசாரணை வேண்டும் என்று அதிமுக-மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் விரும்புவதாகக் கூறினார்.
நான் சிறிதும் தாமதிக்காமல் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டேன். தற்போது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் விளைவாக கடந்த 21ம் தேதி திண்டுக்கல் நகரில் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வாகனம் கேட்பாரற்று நின்றது தெரிந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சென்று அந்த காரை கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் 3 செல்போன்கள் இருந்தன. இந்த செல்போன்கள் கொலையாளிகள் பயன்படுத்தியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அவர்கள் விரைவில் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
போலீஸ் பற்றி நாம் பொதுவான ஒரு தீர்ப்புக்கு வந்து விட முடியாது. இன்று இந்த பிரச்சினைக்கு சட்டசபையில் பதில் சொல்ல வேண்டுமே என்று பத்திரிகைகளை படித்துக் கொண்டிருந்தேன்.
அதில் ஒரு செய்தியைப் பார்த்தேன். கோபிச் செட்டிப்பாளையம் அருகே டி.என்.பாளையத்தில் ஆட்டோ டிரைவர் செந்தில், பிரியா தம்பதிகளின் இரண்டரை வயது குழந்தை சவுமியாவை, பார்த்தீபன் என்பவன் கடத்தி சென்றுள்ளான். ஒரு வீட்டுக்குள் அந்த சிறுமியை அடைத்து வைத்து கொண்டு கோடிக்கணக்கில் பணம் கேட்டுள்ளான்.
போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும், அவனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கலெக்டர் தன்னிடம் வந்து பேச வேண்டும் என்று பார்த்தீபன் கெடு விதித்தான்.
பொறுத்து, பொறுத்துப் பார்த்த போலீஸ் ஒரு பக்கம் பேசிக்கொண்டே மறுபக்கத்தில் வீட்டு ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி, சிறுமியை மீட்டனர். போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிறுமி சவுமியாவை காப்பாற்றியுள்ளனர்.
எனவே இங்கே உறுப்பினர்கள் சொன்னது போல எல்லா போலீஸ்காரர்களும் திண்டுக்கல் போலீசார் போல இருக்க மாட்டார்கள். சவுமியாவை காப்பாற்றிய போலீசார் போல உயிரையும் பணயம் வைத்து செயல்படும் நிறைய போலீசார் உள்ளனர்.
அப்படித்தான் போலீசார் திண்டுக்கல் டாக்டர் கொலை வழக்கையும் நிச்சயம் கண்டுபிடிப்பார்கள். அதில் அலட்சியப்படுத்தாமல் விசாரணை நடக்கும். டாக்டர் பாஸ்கரன், ஏன், யாரால் கடத்தப்பட்டார் என்பதை உலகறியச் செய்வோம்.
முன்னாள் திமுக எம்எல்ஏ எம்.கே.பாலன் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபயிற்சிக்கு சென்ற போது மாயமாகி விட்டார். தேடி தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. சிபிசிஐடி விசாரணையும் நடந்தது. அன்று இருந்த ஆட்சியில் இது பற்றி கேட்டோம். இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றார்.
அதிமுக எம்எல்ஏ சேகர்பாபு (குறுக்கிட்டு): கடந்த ஆட்சியில் பாலன் காணாமல் போனது உண்மை. இதில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
முதல்வர் கருணாநிதி: குற்றவாளிகள் கிடைத்தார்கள். தண்டனையும் கிடைத்திருக்கலாம். இன்னும் எம்.கே.பாலன் உடல் கிடைக்கவில்லை என்றார்.