ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டருகே குப்பைக் குவியல்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீடு அருகே குப்பை பெரும் குவியலாக கிடப்பதால் அப்பகுதி வழியாக செல்லும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியுடன் செல்கிறார்கள்.
அப்துல் கலாம் ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது பூர்வீக வீடு ராமேசுவரம் முஸ்லீம் தெருவில் உள்ளது. இந்த வீட்டில் அவரது அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் அவரது மகன், பேரன், பேத்திகள் வசிக்கின்றனர்.
அப்துல் கலாம் ராமேசுவரம் வரும்போது, அவரது வீட்டுக்குச் சென்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பார்.
கலாம் முன்னாள் குடியரசுத் தலைவர் என்பதால் வீட்டுக்கு நான்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் கலாம் வீட்டையும் தவறாமல் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம்.
இந் நிலையில், இவ் வீட்டில் இருந்து 30 மீட்டர் தொலைவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ் வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் முகத்தைச் சுளித்தபடி செல்கின்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவரின் பூர்வீக வீடு அருகே இப்படி குப்பை மலை போல குவிந்து கிடப்பதால் மக்கள் முகம் சுளிக்கின்றனர், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியுடன் செல்கின்றனர்.
மக்கள் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்ற கலாம் வீட்டருகே குவிந்து கிடக்கும் இந்த குப்பையை அகற்ற நகராட்சி முன்வருமா..