ஐடி படிப்புக்கு மவுசு குறைகிறது-கலை, அறிவியலுக்கு கிராக்கி
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் சரிவில் இருப்பதால் மாணவ, மாணவியர் மத்தியில் ஐடி படிப்புக்கு மவுசு குறையத் தொடங்கியுள்ளது. அதற்கு மாறாக கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் அவர்களது பார்வை திரும்பியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி படிப்புக்குத்தான் பெரும் மவுசு இருந்தது. படித்து முடித்ததும் கை நிறைய வேலை, அமெரிக்காவில் வேலை, சொகுசான வாழ்க்கை என்ற வாய்ப்புகள் அப்போது இருந்ததால், பலரும் டாக்டர் படிப்பைக் கூட வேண்டாம் என்று உதறி விட்டு பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்தனர்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ஐடி பெரும் சரிவில் இருப்பதால் இப்போது ஐடி படிப்புகளுக்கு மவுசு போய் விட்டது. மாறாக கலை, அறிவியல் படிப்புகளில் மாணவ, மாணவியர் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனராம்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 588 இடங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு இவற்றில் 62 ஆயிரத்து 906 இடங்கள் காலியாகவே இருந்தன. காரணம், மாணவர்களின் ஐடி மோகம்.
கடந்த ஆண்டு அரசு உதவி பெறும் கல்லூரியில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 569 இடங்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 93 இடங்கள் நிரம்பின. அரசு கலைக் கல்லூரியில் 52,870 இடங்கள் உள்ளன. அதில் 49 ஆயிரத்து 977 இடங்கள் நிரம்பின.
தனியார் சுயநிதி கலை கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 149 இடங்களில் 39 ஆயிரத்து 537 இடங்கள் நிரம்பவில்லை.
இப்போது இந்த நிலையில் மாற்றம் தெரிகிறது. இந்த ஆண்டு கலை, அறிவியல் படிப்புகளில் அனைத்து இடங்களும் நிரம்பி விடும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜோதிகுமார் கூறுகையில், கடந்த வருடம் போல கலை, அறிவியல் கல்லூரிகளில் இடங்கள் இந்த ஆண்டு காலியாக இருக்க வாய்ப்பு இல்லை.
என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு செல்வதை தவிர்த்து பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவுகளுக்கு அதிகம் பேர் வருகிறார்கள்.
தனியார் நிறுவனங்களும் என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால் பி.எஸ்.சி. படித்து முடித்து வரும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்தவே விரும்புகிறார்கள். அதனால் கலை, அறிவியல் படிக்க மாணவர்கள் விரும்புகிறார்கள்.
எங்களது கல்லூரியில், இந்த ஆண்டு 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டு 1500 பேராக மட்டுமே இருந்தது.
பி.எஸ்.சி. கணித பாடப்பிரிவில் 140 இடங்கள் உள்ளன. ஆனால் 1000 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்கிறார்.
இதே நிலைதான் சென்னை முழுவதும் நிலவுகிறதாம். நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க சிபாரிசுகளுடனும் பலர் வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications