மதுரை சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதியானது
மதுரை: அமெரிக்காவிலிருந்து மதுரை திரும்பிய 8 வயது சிறுவனுக்கு ஸ்வைன் ப்ளூ தாக்குதல் இருப்பது பரிசோதனையில் உறுதியாகிவிட்டது. இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை கே.புதூரை சேர்ந்த 8 வயது சிறுவன் தன் பெற்றோருடன் சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றான். பின்னர் அவர்கள் இந்தியா திரும்பினர்.
மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவர்களுககு பன்றி காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவனது ரத்த மாதிரி எடுக்கப்பட்ட பின் மதுரை செல்ல அனுமதிக்கப்பட்டான். ஆனால், மதுரையில் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. மதுரை வந்தவுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அந்தச் சிறுவன் சேர்க்கப்பட்டான். அவனை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
இந் நிலையில் சிறுவனின் ரத்த மாதிரி டெல்லிக்கு அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மதுரை மருத்துவமனைக்கு தகவல் தரப்பட்டு அந்தச் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் சிறுவன் இவனே.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சிவக்குமார் கூறுகையில், சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்காய்ச்சலுக்கு பகலில் மட்டுமே கொடுக்கப்படும் டாமி புளு என்ற மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் 5 நாட்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்தால் குணமாகிவிடும். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விடலாம் என்றார்.
இந் நிலையில் இன்று சட்டசபையில் சுகாதாரத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்தில் பேசிய மதிமுக எம்எல்ஏ திருமலைக்குமார், தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சுகாதரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,
வெளிநாட்டில் இருந்து இங்கு வருபவர்களுக்கு இந்த நோய் இருக்கிறதா என்பதை அறிய விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுவரை 3 லட்சம் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வெளிநாட்டில் இருந்து கோவைக்கு வந்த 2 பேருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்து விட்டனர்.
இது தவிர மேலும் 2 பேருக்கு சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் நோய்க்கான மருந்து கைவசம் உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் பரவாமல் தடுக்க சிகிச்சை அளிப்பவர்களுக்கு முககவசமும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் கொள்கை விளக்க குறிப்புகளை அவர் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
பழைய சென்ட்ரல் ஜெயில் இருந்த இடத்தில் ரூ. 70 கோடி செலவில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்காக புற நோயாளிகளுக்கான வளாகம் கட்டப்படும். மேலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.400 கோடியில் அங்கு மிகப் பெரிய ரத்த வங்கி தொடங்கப்படும்.
வயது முதியோருக்கு தேவையான தனி சிகிச்சைக்காக வயது முதிர்வு சிகிச்சை மையம் கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.112 கோடியில் கட்டப்படும்.
மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகியவை மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியில் நிலை உயர்த்தப்பட உள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.