பெட்டி.. சென்னை விமான நிலையத்தில் பீதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியால் வெடிகுண்டுப் பீதி ஏற்பட்டது. ஆனால், அந்தப் பெட்டியில் 165 வாஸ்து மீன்கள் இருந்தன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் இறங்கிய பிறகு அவர்களுக்கான உடைமைகள் மற்றும் சூட்கேஸ்கள் கன்வேயர் பெல்ட்டில் வந்தன.
பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துச் சென்ற நிலையில் ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் அங்கேயே அனாதையாகக் கிடந்தது. அது யாருடையது என்ற விவரமும் சூட்கேசில் இல்லை,
இதனால் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெட்டி விமான நிலையத்தி்ன் ஒரு மூலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சூட்கேசை ஆய்வு செய்து குண்டு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின் திறந்து பார்த்தனர்.
அதில் 3 பாலிதீன் பைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு 165 வாஸ்து மீன்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
அதை யாரோ கடத்தி வந்து அதிகாரிகளுக்கு பயந்து விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெட்டியை அதிகாரிகள் சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்பினர்.












Click it and Unblock the Notifications