ரேசன் கார்ட் பார்த்தா நாய் கடிக்கும்?-அதிமுக
சென்னை: நாய்க் கடிக்கு அரசு மருத்துவமனைகளில் ரேசன் கார்டை காட்டினால்தான் ஊசி போடுவோம் என்கிறார்கள். ரேசன் கார்ட் வைத்திருப்பவர்களை பார்த்தா நாய் கடிக்கும்? என்று சட்டசபையில் அதிமுக கேள்வி எழுப்பியது.
சட்டசபையில் இன்று மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அதன் விவரம்:
அதிமுக உறுப்பினர் பொன்னுதுரை: சுகாதாரத் துறை ஊழியர்களின் இடமாற்றம் அதிமுக ஆட்சியில் கவுன்சிலிங் மூலம் நடந்தது. தற்போது நியாயமற்ற முறையில் இட மாறுதல் கொடுக்கப்படுகிறது. பொது மருத்துவமனைகளில் சரியான நேரத்துக்கு வராத ஊழியர்களை மேல் அதிகாரிகள் சரியாக கண்காணிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்குவது அதிகமாக உள்ளது. இதய நோய் சிகிச்சைக்கு வருபவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் கேட்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் இவர்களை அலைய வைக்கும்போது நெஞ்சு வலி மேலும் அதிகமாகிறது.
நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: உறுப்பினர் தவறாக தகவல்களை சொல்லக்கூடாது, மருத்துவமனைகளில் லஞ்சம், ஊழல் எதுவும் நடக்கவில்லை. எதையும் இங்கு ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். யார் பணம் கேட்டார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?. அரசு மருத்துவமனைகளில்தான் தரமான அறுவை சிகிச்சை நடக்கிறது.
பொன்னுதுரை: நாய்க்கடிக்கு மருந்து கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் ரேசன் கார்டை காட்டினால்தான் ஊசி போடுவோம் என்கிறார்கள். ரேசன் அட்டை வைத்திருப்பவர்களை பார்த்தா நாய் கடிக்கும்?. இப்படிப்பட்ட அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி (குறுக்கிட்டு): ரேசன் கார்டு இருந்தால்தான் ஊசி போடுவோம் என்று அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. யாராவது அப்படி கேட்டிருந்தால் குறிப்பிட்டு சொன்னால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன்: நாய்க் கடிக்கான சிகிச்சைக்காக மக்கள் நாய் படாதபாடு படுகிறார்கள்.
அமைச்சர் பன்னீர்செல்வம்: 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்க் கடி ஊசிகள் கடந்த ஆண்டில் வினியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போதும் சுமார் 80,000 ஊசிகள் கையிருப்பில் உள்ளன என்றார்.