அதிசயம்!-அரசு பள்ளிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்!!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்று ஐஎஸ்ஓ 900-2008 தரச் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது.
அரசு பள்ளிகள் என்றாலே அழுக்கடைந்து சுவர்கள், நரை விழந்தார் போல் அங்காங்கே வெள்ளை திட்டுகளுடன் கூடிய கரும்பலகை, சுகாதாரமற்ற சூழ்நிலை போன்றவை தான் நமது ஞாபகத்துக்கு வரும்.
ஆனால், அரசு பள்ளிகளிலும் சுகாதாரத்தை பேண முடியும், மனமிருந்தால் மார்க்கம் உண்டு என ஒரு தமிழக அரசு பள்ளி நிரூபித்துள்ளது. அதற்காக அந்த பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பள்ளி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சித்தன்வாழுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தான். இங்கு 185 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இங்கு சுற்றுச்சூழல், மாணவர்களின் கல்வித்தரம், சுகாதாரம், அலுவலக பதிவேடுகள் போன்றவைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தங்கள் பள்ளியை ஆய்வு செய்து ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கும்படி சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டின் குவெஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன கிளைக்கு தலைமை ஆசிரியர் பத்மநாபன் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்த கடிதத்தை ஏற்று அந்த நிறுவனம் பள்ளியை ஆய்வு செய்தது. பின்னர் பள்ளிக்கு சர்வதேச தரச்சான்று ஐஎஸ்ஓ 9001-2008 வழங்குவதாக அறிவித்தது.
இதே போன்று மற்ற அரசு பள்ளிகளும் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற முயற்சித்தால் பெற்றோர்கள் தானாக முன்வந்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள். கவனிப்பாரா கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு...