மூலிகை வயாகரா: சட்டசபையில் சுவாரஸ்யம்!
சென்னை: தமிழக அரசின் டாம்ப்கால் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள லபூப் சகீர் என்கிற மூலிகை வயாகரா செயல்படும் விதம் குறித்து அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார் சட்டசபையில் சந்தேகம் எழுப்ப, அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விளக்கம் அளிக்க சபையில் கலகலப்பு கூடியது.
டாம்ப்கால் நிறுவனம் சமீபத்தில் லபூப் சகீர் என்கிற மூலிகைத் தைலத்தை அறிமுகப்படுத்தியது. ஆண்மைத் திறனை அதிகரிக்க உதவும் தைலம் இது. மூலிகை வயாகரா என்றும் அழைக்கப்படுகிறது.
நேற்று சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது லபூப் சகீர் குறித்தும் சுவாரஸ்ய விவாதம் நடந்தது.
அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் எழுந்து, லபூப் சகீரை எப்படி நம்புவது, அது உண்மையிலேயே பலன் தருமா என்று கேட்டபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், தேவைப்படுபவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளோமே என்று பதிலளிக்க வெடிச் சிரிப்பு கிளம்பியது.
பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் எழுந்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மருந்தைக் கொடுத்துள்ளோம். உறுப்பினர் ஜெயக்குமாருக்கும் தந்துள்ளோம்.
அவரை இதை பயன்படுத்தி சோதித்துப் பார்த்து விட்டு முடிவைச் சொல்லட்டும். ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் பலன் இருந்ததா, இல்லையா என்பதை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று கூற சிரிப்பலை அடங்க நேரமானது.
பின்னர் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில் டாம்ப்கால் நிறுவனத்தின் இந்த மூலிகைத் தலைம் இதுவரை 16 டன் அளவுக்கு விற்றுள்ளது. இதன் விலை 100 கிராமுக்கு 28 மட்டுமே. இந்த தைலத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications