பரமக்குடி-அரசு பள்ளிக்கு பொது மக்கள் பூட்டு!
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்தாததைக் கண்டித்து, குழந்தைகளுடன் பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளி கடந்த 2004 ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1964ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 252 மாணவர்கள் இருக்கின்றனர்.
அதே போன்று 2007 ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசுக்கு கல்வித்துறை மூலம், பள்ளி கல்விக் குழுவினர் பரிந்துரை செய்தனர். இதற்காக பொது மக்கள் பங்களிப்பு தொகையாக ரூ. 1 லட்சம் வழங்கினர்.
அரசு அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதி வரை மனு கொடுத்தனர். இந்த முறை எப்படி பள்ளி உயர்நிலை பள்ளியாக மாறிவிடும். தங்கள் பிள்ளைகள் மேல் படிப்புக்காக வேறு ஊர்களில் இருக்கும் உயர் நிலை பள்ளிக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது என நம்பினர்.
ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் இந்த பள்ளியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பொதுக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்தப் பள்ளிக்கு பூட்டு போட்டு பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் (பரமக்குடி) சண்முகநாதன், உதவி தொடக்க கல்வி அலுவலர் அசோகன், மண்டல துணை தாசில்தார் நாகநாதன், டி.எஸ்.பி., பெருமாள் ஆகியோர் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications