எச்சரிக்கை வாசகத்துடன் சிகரெட் பாக்கெட்கள் விற்பனை வந்தன
சென்னை: மத்திய அரசின் உத்தரவின்படி, அபாய எச்சரிக்கை வாசகம் மற்றும் படம் பதிக்கப்பட்ட சிகரெட் பாக்கெட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஜூலை 1ம் தேதி முதல் இவை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
புகையிலை பழக்கத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு பீடி, சுருட்டு சிகரெட், மற்றும் புகையிலை, மூக்குபொடி ஆகிய பாக்கெட்டுகளில் எச்சரிக்கை செய்யும் வகையில் மண்டை ஓடு, தேள், மற்றும் ஆரோக்கியம் இல்லாத நுரையீரல் படத்தை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அபாய எச்சரிக்கை படங்கள் இல்லாமல் வெளியிட்டால் பொருட்களின் தயாரிப்பாளர்கள் மீது 5 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விற்பனை செய்யும் வியாபாரிகள், வினியோகஸ்தர்கள் மீது ஒரு ஆண்டு ஜெயில், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து குத்கா, புகையிலை, மூக்குப்பொடி பாக்கெட்டுகளில் தேள் படங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டன.
இந்த நிலையில், சார்மினார், சாம்ஸ் உள்ளிட்ட சிகரெட் பாக்கெட்களில் ஆரோக்கியமில்லாத நுரையீரல் படத்துடன் கூடிய படம் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இருப்பினும் கிங்ஸ் உள்ளிட்ட பிராண்ட் சிகரெட் பாக்கெட்களில் இந்தப் படங்கள் இன்னும் இடம் பெறவில்லை.
வருகிற 30ம் தேதிக்குள் படங்களை அச்சிட வேண்டும். ஜூலை 1ம் தேதி முதல் எச்சரிக்கை வாசகம், படம் இல்லாமல் வெளியாகும் சிகரெட் பாக்கெட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.