அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வழக்கு
சென்னை: அரக்கோணத்தில் எனது சின்னத்தை தேர்தல் அதிகாரிகள் மாற்றி விட்டதால் நான் தோல்வி அடைந்து விட்டேன். எனவே அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் வென்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி சுயேச்சை ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வெறும் 2799 வாக்குகளை மட்டுமே பெற்றவர் இந்த வேட்பாளர். அவரது பெயர் ஐசக் ஜெபக்குமார். அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி என்ற பெயரில் இவர் போட்டியிட்டார்.
இத்தேர்தலில் ஜெகத்ரட்சகன் உள்பட மொத்தம் 20 பேர் போட்டியிட்னர். ஜெகத்ரட்சகன் 4 லட்சத்து 15 ஆயிரத்து 41 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தற்போது மத்திய இணை அமைச்சராகவும் உள்ளார்.
இந்த நிலையில் ஜசக் ஜெபக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது..
எனக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் திடீரென எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் டேபிள் சின்னத்தை ஒதுக்கி விட்டனர்.
டார்ச் லைட் சின்னத்தை வைத்து மக்களிடையே பிரசாரம் செய்தேன். எனது சின்னத்தை மாற்றியதால் மக்கள் குழப்பம் அடைந்து தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு போட்டுவிட்டனர்.
இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெபக்குமார்.