இடைத் தேர்தலுக்குத் தயாராகிறார் ஜெ. - தினகரனை மீண்டும் பொருளாளராக்க திட்டம்

பதவி ஏதும் இல்லாமல் உள்ள தினகரன், கண்ணப்பன் மற்றும் தம்பித்துரை ஆகியோருக்கு முக்கியப் பொறுப்புகளை அளிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெறவும், திமுகவின் சகலவிதமான உபாயங்களை வெல்லவும் புதிய வியூகங்களை அவர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.
தொண்டாமுத்தூர், இளையாங்குடி, கம்பம், பர்கூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இவற்றில் தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் மதிமுகவும், இளையாங்குடியில் திமுகவும், பர்கூரில் அதிமுகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தன.
இதில் தொண்டாமுத்தூர் உறுப்பினர் கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் திமுகவில் இணைந்து விட்டனர். மீண்டும் அவர்களே அங்கு போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது.
இளையாங்குடியில் திமுக சார்பில் வென்ற ராஜ கண்ணப்பன் இப்போது அதிமுகவில் இருக்கிறார். அதிமுகவில் சேர்ந்த அவரை சிவகங்கை லோக்சபா தொகுதியில் ஜெயலலிதா நிறுத்தினார். ஆனால் மயிரிழையில் தோல்வியுற்றார் கண்ணப்பன்.
பர்கூரில் வென்றிருந்த தம்பித்துரை இப்போது எம்.பியாகி விட்டார்.
இளையாங்குடி, பர்கூரில் மீண்டும் அதிமுக போட்டியிடும். அதேசமயம், கம்பம், தொண்டாமுத்தூரை அது மதிமுகவுக்கே தருமா அல்லது அதிமுகவே போட்டியிடுமா என்று தெரியவில்லை.
இந்த நிலையில் சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்க ஜெயலலிதா பல்வேறு வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டார்.
அதற்கு முன்னோட்டமாக கட்சி நிர்வாகிகளில் மாற்றம் கொண்டு வர அவர் திட்டமிட்டுள்ளார். பொருளாளராக இருந்து வரும் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து அந்தப் பொறுப்பை மீண்டும் தினகரனுக்கே தரலாம் எனத் தெரிகிறது.
கம்பம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராகவும் தினகரன் நியமிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
அதேபோல இளையாங்குடி பொறுப்பாளராக ராஜ கண்ணப்பனும், பர்கூர் பொறுப்பாளராக தம்பித்துரையும் நியமிக்கப்படக் கூடும் என பேச்சு அடிபடுகிறது.
சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அதை பலமாக வைத்து பொதுத் தேர்தலை சந்திக்க பயனுள்ளதாக இருக்கும் என ஜெயலலிதா கருதுவதால் இப்போதே திட்டமிடல்களை ஆரம்பித்து விட்டார்.












Click it and Unblock the Notifications