ரயில் கடத்தியது யார் - துப்பு கிடைக்காததால் தொடரும் குழப்பம்
சென்னை: சென்னையில் மின்சார ரயிலைக் கடத்தி மோத விட்ட சம்பவத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. மர்ம நபராக கருதப்பட்ட நாகராஜ் உயிருடன் வந்ததாக தகவலை போலீஸார் மறுத்துள்ளனர். இந்த வழக்கில் இன்னும் துப்பு துலங்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலைக் கடத்திச் சென்று சரக்கு ரயிலுடன் மோத விட்ட சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் 6 பேரின் அடையாளம் தெரிந்து விட்டது. 7வது நபரின் அடையாளம் மட்டும் தெரியவில்லை. அந்த நபரின் கையில் இருந்த தெலுங்குப் பெயரான நாகராஜை வைத்து அவர் ஆந்திரா என்று தெரிய வந்தது.
அவர்தான் ரயிலை கடத்தியவர் என்றும் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது உடலை அடையாளம் காட்டுவதற்காக ஆந்திர மாநிலம் தடாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மனைவி, தாயார், குழந்தைகள், இது நாகராஜின் உடல் இல்லை என்று கூறி விட்டனர். தடயவியல் சோதனையும் அவ்வாறே கூறியுள்ளது.
இதனால் இந்த வழக்கு மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்கிறது.
இதுகுறித்து சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. ஷாஜகான் செய்தியார்களிடம் கூறுகையில்,
மின்சார ரெயில் கடத்தல் வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அந்த சம்பவத்தில் இறந்துபோன அடையாளம் தெரியாத நபர்தான் ரெயிலை கடத்தியிருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அந்த அடையாளம் தெரியாத நபர் ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த நாகராஜனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடு விசாரணை நடத்தினோம். இறந்தவரின் உடலை அவரது மனைவியும், தாயாரும் அடையாளம் காட்டினார்கள்.
தாயார் அந்த நபர் தனது மகன் நாகராஜனை போல் இருக்கிறான் என்று தெரிவித்தார். மனைவியோ அந்த நபர் தனது கணவர் இல்லை என்று கூறினார். இதனால் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. டி.என்.ஏ. பரிசோதனையில் அந்த நபர் நாகராஜன் இல்லை என்பது தெரிய வந்தது. இத்துடன் அந்த பிரச்சினை முடிந்துவிட்டது.
நேரில் ஆஜரானாரா நாகராஜ்?
இதற்கிடையில், நாகராஜன் பெங்களூரில் உயிரோடு இருப்பதாக அவரது சகோதரரும், சகோதரியும் கூறினார்கள். டி.என்.ஏ. பரிசோதனையில் நாகராஜன் இல்லை என்று தெரிய வந்ததால், அவர் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல் எங்களுக்கு தேவையற்ற ஒன்றாகும்.
இருந்தாலும், நாகராஜன் உயிரோடு இருப்பதை விசாரணை மூலம் எங்கள் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இந்த நிலையில், நாகராஜன் சிபிசிஐடி. அலுவலகத்தில் நேரில் வந்து ஆஜரானார் என்ற தவறான செய்தி வெளியாகி உள்ளது. அவர் அவ்வாறு ஆஜராகவில்லை என்றார்.
இந்த வழக்கில் இவ்வாறு தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதால் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடர சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.