உதய சூரியன் அல்லது இரட்டை இலை சின்னம் கேட்கும் சிரஞ்சீவி
கடந்த தேர்தலில் ஆந்திராவில் போட்டியிட்ட நடிகர் சிரஞ்சிவீயின் பிரஜா ராஜ்ய கட்சிக்கு ஒரு எம்.பி. கூட கிடைக்கவில்லை. என்றாலும் சட்டசபைக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரஜா ராஜ்ஜியம் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கும் கூட்டம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அந்த கூட்டத்துக்கு பின் சிரஞ்சீவி கூறுகையில்,
சமீபத்தில் முடிந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பிரஜா ராஜ்ஜியம் ரயில் என்ஜின் சின்னத்தில் போட்டியிட்டது. வாக்குப் பதிவு எந்திரத்தில் இந்த சின்னங்கள் தெளிவாக தெரியவில்லை.
மேலும், இந்த சின்னத்தை போலவே டிராக்டர் மற்றும் ரோடு ரோலர் உள்ளிட்ட சில சின்னங்களும் இருந்தன. இதனால் ஏழை மற்றும் வயதான மக்கள் குழப்பத்தில் அந்த சின்னங்களுக்கு வாக்களித்துவிட்டனர். இதனால் அந்த சின்னங்களில் போட்டியிட்ட பல சுயேட்சை வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இது அனைத்தும் எங்களது வாக்குகள் தான்.
இது போன்ற நிலைமை அடுத்த தேர்தலிலும் ஏற்படக்கூடாது என்பதால் கட்சி சின்னத்தை மாற்ற முயற்சித்து வருகிறோம். எங்கள் கட்சி கொடியில் சூரியன் இருப்பதால் அந்த சின்னத்தை கேட்கலாம் என இருக்கிறோம். அது கிடைக்காவிட்டால் இரட்டை இலை அல்லது குடை உள்ளிட்டவற்றை கேட்க இருக்கிறோம்.
இந்த சின்னங்கள் வாக்குப் பதிவு எந்திரத்தில் நன்றாக விழுகிறதா என்பதை சோதித்து பார்க்க இருக்கிறோம். அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சி புதிய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும். பதவி ஆசை பிடித்தவர்கள் சிலர் எங்களது கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார்கள். இதனால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தான் என்னுடைய ரோல் மாடல். என்னுடைய படங்களில் பல பாடல்களில் அவரது பாப் ஆல்பத்தின் தாக்கத்தை பார்க்க முடியும். அவரது நடன அசைவுகளை பின்பற்றி தான் நான் பெரும் புகழ் பெற்றேன். இசை உலகம் இருக்கும் வரை மைக்கேல் ஜாக்சனின் புகழும் இருக்கும் என்றார் சிரஞ்சீவி.