தூக்கில் தொங்கி சித்த மாணவர்கள் நூதனப் போராட்டம்
நெல்லை: பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் தூக்கில் தொங்கி நூதன போராட்டம் நடத்தினர்.
நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள மத்திய மூலிகை ஆராய்ச்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 33 மாணவர்களை கடந்த 18ம் தேதி கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க கோரியும், கல்லூரியை உடனே திறக்கவும் வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13-வது நாளான நேற்று சித்த மருத்துவ கல்லூரி வாளகத்திலுள்ள மரத்தில் 4 மாணவர்கள் தூக்கில் தொங்குவது போல் நடித்து நூதன போராட்டம் நடத்தினர்.
இது தவிர மாணவர் பாரூக், மாணவிகள் கீர்த்தனா, பானுபிரியா, சிவசங்கரி ஆகியோர் தொடர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சித்த மருத்துவ கல்லூரி மூலிகை ஆராய்ச்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த சித்த மருத்துவ நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஜோசப் தாஸ் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில், மத்திய அரசு சித்த மருத்துவம் மற்றும் மூலிகை செடிகளை ஆய்வு செய்ய பாளையங்கோட்டையில் மூலிகைசெடி கணக்கெடுப்பு ஆய்வு மையத்தை கடந்த 1971 ம் வருடம் ஏற்படுத்தியது. இந்த மையம் பொது மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறது.
இந்த மையத்தை பெங்களூரில் உள்ள ஆயுர்வேத மையத்துடன் இணைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த மையத்தை மேட்டூருக்கு மாற்றும்படி மத்திய ஆயுர்வேத இயக்குனர் உத்தரவிட்டார்.
இங்கு இந்த மையம் சுமார் 5, 000 சதுரடி பரப்பில் இயங்கி வருகின்றது. அதை மேட்டூரில் 150 சதுரடி கொண்ட இடத்திற்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இந்த மையத்தை சேலம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாற்றும்படி இயக்குனர் உத்தரவிட்டார்.
இதை கண்டித்து சித்த மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், கடந்த மாதம் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, மூலிகைசெடி ஆய்வு மையத்தை மாற்ற கூடாது என உத்தரவிட வேண்டும். மனு மீதான விசாரணை முடியும் வரை இதை மாற்ற இடைக்கால தடை விதிக்க வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், டி. அரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் மூலிகை செடி ஆய்வு மையத்தை மாற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த மனு குறித்து விளக்கம் அளிக்க இந்திய சுகாதாரம், குடும்ப நல செயலாளர், மத்திய சித்த மருத்துவ கவுன்சில் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications