தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததே ஈழத்தில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் - சீமான்
சென்னை: இலங்கையில் இவ்வளவு அழிவை சந்தித்திருப்பதற்கு காரணம் தமிழன் இந்த மண்ணில் தமிழனாக இல்லை என்பதுதான். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. இனியாவது எனது தாய் தமிழ் உறவுகள் எல்லாம் தமிழன் என்ற ஒற்றை குடையின் கீழ் அணிதிரளாது போனால் இந்த இனத்தை காக்க யாராலும் முடியாது என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.
பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் நேற்று பேரணி நடைபெற்றது.
சென்னை மன்றோ சிலையில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு பாமக மாநில மகளிர் அணித் தலைவி நிர்மலா ராஜா தலைமை தாங்கிநார்.
சீமான் பேரணியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இலங்கை அதிபர் ராஜபக்ச போர்க் குற்றம் செய்து இருக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்போகும் போது அந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் பொருட்டு இந்தியா கையெழுத்திட்டதே, இதனை விட இலங்கை தமிழர்களுக்கு என்ன துரோகம் செய்யப் போகிறார்கள். இதை கேட்டால் நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள்.
இலங்கையில் இவ்வளவு அழிவை சந்தித்திருப்பதற்கு காரணம் தமிழன் இந்த மண்ணில் தமிழனாக இல்லை என்பதுதான். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. இனியாவது எனது தாய் தமிழ் உறவுகள் எல்லாம் தமிழன் என்ற ஒற்றை குடையின் கீழ் அணிதிரளாது போனால், இந்த இனத்தை காக்க யாராலும் முடியாது.
டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு நம் இனம் காக்க போராட வேண்டும் என்றார் சீமான்.