மாவோயிஸ்ட் பிடியிலிருந்த கடைசி நகர் வீழ்ந்தது
லால்கர் (மேற்கு வங்கம்): மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த கடைசி நகரமான காந்தாபஹாரியையும் துணை ராணுவப் படையினர் பிடித்து விட்டனர்.
இந்த நகரைப் பிடிப்பதற்காக துணை ராணுவப் படையினர் லால்கர் மற்றும் ராம்கரிலிருந்து இன்று காலை கிளம்பினர்.
மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால்கர், ராம்கர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளைப் பிடித்து வைத்துள்ள மாவோயிஸ்டுகளை புற ராணுவப் படையினர் விரட்டியடித்து வருகின்றனர்.
ராம்கர், லால்கர் ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டு விட்டன. மாவோயிஸ்டுகள் வசம் கடைசியாக இருந்த முக்கியப் பகுதியான காந்தாபஹாரி பகுதியையும் மீட்க துணை ராணுவப் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
1600 வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎப், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மாநில ஆயுதப் படைப் போலீஸார், ரிசர்வ் போலீஸார் ஆகியோர் கொண்ட பெரும் படை இன்று காலை 7 மணிக்கு தங்களது இறுதித் தாக்குதலைத் தொடங்கியது.
லால்கர் மற்றும் ராம்கர் ஆகிய இரு இடங்களிலிருந்தும் இரு முனைகளில் படைகள் விரைந்தன. காந்தபஹாரியை அடைந்த துணை ராணுவப் படையினர் இன்று பிற்பகலில் அந்தப் பகுதியையும் பிடித்து விட்டனர்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இந்த நகரை தங்களது தலைநகரம் போல பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை ராணுவப் படையினர் பெருமளவில் குவிந்ததைத் தொடர்ந்து காந்தாபஹாரியில் இருந்த மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் தப்பி ஓடி விட்னர்.
அதேபோல பாரபேலி கிராமமும் மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய நடவடிக்கையின்போது மாவோயிஸ்ட்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தாக்குதலையும் நடத்தவில்லை.
தற்போது மீட்கப்பட்டுள்ள காந்தாபஹாரியில் ஒரு பாதுகாப்புப் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாகி விட்ட மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான சத்ரதர் மகதோவைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 18ம் தேதி மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தொடங்கிய நடவடிக்கை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications