கருணாநிதியின் அபத்தமான பேச்சு-வைகோ
விழுப்புரம்: ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு காங்கிரஸ் அரசுடன் துணை போய்விட்டு இப்போது இன ஒற்றுமை குறித்து கருணாநிதி பேசுவது அபத்தமானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
விழுப்புரம் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
நடந்து முடிந்த தேர்தலில் 4 இடங்களில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டோம். அதில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றோம். காட்டிலே கூட சிங்கம் தனியாகத்தான் இருக்கிறது.நமது கட்சியில் இருந்து ஒரு சிலர் சென்றதற்கு பின்னர்தான் நாம் மிக வேகமாக கட்சிப் பணியாற்றுகின்றோம்.
மதிமுக காட்டாற்று வெள்ளத்தையும், சூறைக்காற்றையும் தாண்டி பல தோல்விகளை கடந்து எழுச்சியுடன் எழுந்து நிற்கிறது. ஆதலால் தோல்வியைப்பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை.
எல்லோரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையில் இதுபோல் நடந்திருக்குமா என்று கருணாநிதி கூறுகிறார். இலங்கையில் இன அழிப்புப் போரை நடத்திய காங்கிரஸ் அரசுக்கு துணை போய்விட்டு இப்போது கருணாநிதி இவ்வாறு பேசுவது அபத்தமானது.
ஈழத்தில் குழந்தைகள், பெண்கள் என்று பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் இப்போது இன ஒற்றுமை குறித்துப் பேசுகிறார் கருணாநிதி.
ஈழப் பிரச்சனை காரணமாக 14 பேர் தீக்குளித்தனர். அவர்களுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்தாரா?. ஏன், திமுக தொண்டர்கள் இருவர் தீக்குளித்தனரே.. அவர்களுக்குக் கூட இவர் இரங்கல் தெரிவிக்கவில்லையே.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றிருக்கிறது. நகரங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அங்கு இவர்கள் வாரி இறைத்த பணத்தால் பயன் ஏற்படவில்லை. கிராமப்புற மக்களுக்கு பல கஷ்டங்கள் உள்ளன. அதனால் அவர்களுக்கு கடைசி நேரத்தில் ஒரு மனப் போராட்டம் ஏற்பட்டு மாறி வாக்களித்துவிட்டனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் இதை மாற்ற வேண்டும். நகரங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வை கிராமப்புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.
ஈழப்போர் மீண்டும் வெடிக்கும். பிரபாகரன் இறந்து விடவில்லை, உயிருடன் உள்ளார். ராமாயணத்தில் இந்திரஜித் தன் மீது பாய்ந்த அம்பைப் பிடுங்கி போர் தொடுத்ததாக கம்பன் கூறுவான். அதற்கு இணையான வீரர் பிரபாகரன்.
தமிழ் ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் நாங்கள் என்றைக்கும் ஆதரிப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் கடைசி தமிழன் இருக்கும் வரை, மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை ஈழப்போர் ஓயாது. இலங்கையில் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் மட்டுமே.
நான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் அதிமுகவினர் நன்றாகத் தேர்தல் பணியாற்றினர். ஆனால், பண பலத்தால் தான் நாம் தோற்கடிக்கப்பட்டோம்.
திருச்சியில் செப்டம்பர் 15ம் தேதி நடக்க உள்ள அண்ணா நூற்றாண்டு மாநாட்டு பணிகளில் இப்போதே ஈடுபடுங்கள். 20, 25 மாவட்டங்களுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். அனைத்து மாவட்டங்களிலும் கட்சி மிகவும் எழுச்சியாக உள்ளது. நாம் தோல்வியுற்றாலும் கெளரமான தோல்வியை சந்தித்துள்ளோம்.
மக்கள் மனதில் தற்போது ஈரமுள்ளது. அதனை நீங்கள் பயன்படுத்தி விதைகளை விதைத்து கட்சியை வளர்க்க வேண்டும். கட்சிக்கு அதிக இளைஞரை கொண்டு வாருங்கள். தமிழ் உணர்வுள்ள, மான உணர்வுள்ள இளைஞர்களை சேர்த்திடுங்கள். தமிழர் வாழ்விற்காக போராடுகின்ற இயக்கத்தில் சேர வா என்று அழையுங்கள் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications