மதுரை: வீட்டில் குண்டு வெடித்து 2 சகோதரர்கள் பலி
சென்னை: மதுரையில் இன்று காலை ஒரு வீட்டில் குண்டு வெடித்ததில் வாலிபரும் அவரது சகோதரரும் பலியாயினர். இதில் ஒருவர் குண்டு தயாரிக்கும்போது அது வெடித்ததாகத் தெரிகிறது.
மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகரைச் சேர்ந்த ரேசன் கடை ஊழியர் மணி. இவரது மகன்கள் நாகநாதன் (30), வடிவேல் செல்வம் (28).
வீட்டின் முன் பலசரக்கு கடை நடத்தி வருகிறார் மணி. வடிவேல் செல்வம் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். நாகநாதன் இராக்கில் வேலை பார்த்து வந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு நாகநாதன் மதுரை திரும்பினார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த வந்தன.
இந் நிலையில் இன்று அதிகாலை வீட்டில் நாகநாதன் தூங்கிய அறையில் பயங்கர வெடிசத்தம் கேட்டது. இதில் வீட்டின் மேற் பகுதியில் இருந்த ஆஸ்பெட்டாஸ் பறந்து போய்விட்டது.
வீட்டு முகப்பில் உள்ள பலசரக்கு கடையிலும் தீப்பிடித்துக் கொண்டனர்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கரிமேடு போலீசுக்கு தகவல் தந்தனர்.
குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டதால் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். நாகநாதன் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார். மற்றொரு அறையின் சுவர் இடிந்து விழுந்து வடிவேல் செல்வம் இறந்து கிடந்தார்.
இருவரது பிணங்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகநாதன் ஈராக்கில் அமெரிக்கப் படையினருக்கு உதவும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது வெடி பொருள் தயாரிக்க கற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
மதுரை திரும்பியதும் வெடிபொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் அதுவெடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நாகநாதனின் தந்தை மணியும் தனது மகன் தற்கொலை செய்யும் முயற்சியில் இறந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications