மாவோயிஸ்ட் மீதான தாக்குதலை நிறுத்துங்க-மம்தா
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கிராமங்களைப் பிடித்து வைத்துள்ள மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுவது, பேசுவதில் நம் ஊர் 'தலைவி'யை மிஞ்சுபவர் மம்தா.
கொல்கத்தாவில் நிருபர்களிடம் அவர் அளி்த்த பேட்டி இது..
லால்கரில் மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பதுக்கி வைக்கப்பட்டவை ஆகும்.
இதனால் மாவோயிஸ்டுகள் மீது நடத்தப்படும் தாக்குதலை மத்திய துணை ராணுவப் படையினர் நிறுத்திவிட்டு லால்கர் உள்ளிட்ட பல பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
அதன் மூலம் தான் மக்களுக்கு அமைதியையும், பாதுகாப்பையும் தர முடியும்.
கடந்த 2007ம் ஆண்டு நந்திகிராமில் என்ன நடந்தது?. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்பு கொடிகளை ஏந்தியபடி நிலங்களை கையப்படுத்தினர். அதேபோல இப்போதும் அந்தக் கட்சியினர் மோட்டார் சைக்கிள்களில் லால்கர் பகுதிக்கு சென்று அங்கு நிலங்களை கைப்பற்றி வருகின்றனர்.
மாவோயிஸ்டுகளை விரட்டுகிறோம் என்ற பெயரில் லால்கரில் நடப்பது என்ன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய படைகளுடன் சேர்ந்து மாநில அரசும் நாடகம் ஆடி வருகிறது.
இதனால் இது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு உடனடியாக அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்க வேண்டும்.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பஸ்சிம், மெடினி பூர், பாங்குரா மற்றும் புருலியா மாவட்டங்களை பாதிக்கப்பட்ட பகுதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
இதன்மூலம் தனது அரசியல் சுய லாபத்துக்காக உயிரைக் கொடுத்துப் போராடி வரும் மத்தியப் படையினரை முடிந்த வரை கேவலப்படுத்திவிட்டார் மம்தா என்பதே உண்மை.