திருப்பதி-கைக்குழந்தையுடன் வரும் பெற்றோருக்கு விரைவு தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உடல் ஊனமுற்றோர், முதியோர் ஆகியோரும் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது திருப்பதி திருமலை தேவஸ்தானம்.
இவர்கள் மகா வாயில்கள் வழியே அழைத்து செல்லப்படுவார்கள். எனவே அவர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசித்து வர முடியும்.
கோவிலின் புதிய நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்ற கிருஷ்ணா ராவ் பக்தர்களோடு பக்தராக நடந்து சென்று காத்திருந்தவர்களிடம் குறைகளைக் கேட்டார்.
அப்போது பலரும், கைக்குழந்தையுடன் வரும் தாய்க்கு மட்டும் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறார்கள். ஆனால், அந்த பெண்ணின் கணவர் பொது தரிசனத்துக்கு நிற்க வேண்டியது இருக்கிறது. அவர் தரிசனம் முடிந்து வரும் வரை, தரிசனத்தை முடித்த தாய், தனது குழந்தையுடன் பல மணி நேரம் தனியாக வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இனி கைக் குழந்தையுடன் வரும் தாயுடன் அவரது கணவருக்கும் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார்.