வணங்காமண் நிவாரணப் பொருட்கள் - சென்னையில் இறக்கி எடுத்துக் கொள்ள இலங்கை ஒப்புதல்

ஐரோப்பிய தமிழர்கள் வன்னியில் பாதிப்புக்குள்ளான தமிழர்களுக்காக அரும்பாடு பட்டு சேகரித்து அனுப்பிய உணவுப் பொருட்கள், மருந்து, உடை உள்ளிட்டவை வணங்காமண் என்று தமிழர்களால் பெயர் சூட்டப்பட்ட சிரிய நாட்டு கேப்டன் அலி என்ற கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தக் கப்பலை இலங்கை அரசு துறைமுகத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது.
இதையடுத்து சென்னை நோக்கி வந்த அந்தக் கப்பல், சென்னை துறைமுகத்திற்கு அருகே கடந்த பல நாட்களாக நின்று கொண்டிருக்கிறது.
இந்தக் கப்பலை சென்னைக்குள் அனுமதிக்காமல், மத்திய அரசும் தாமதித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும்படி கோரி முதல்வர் கருணாநிதி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்குக் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களை ஏற்றுக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாம்.
ஆனால் அதில் உள்ள பொருட்களை சென்னையில் தரையிறக்கி, அவற்றை செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக இலங்கை கடற்படை பெற்றுக் கொள்ளுமாம்.
வணங்காமண் கப்பலில் 884 டன் நிவாரணப் பொருட்கள் உள்ளன. கப்பலில் ஏற்றி பல நாட்களாகி விட்டதால் பெரும்பாலான உணவுப் பொருட்கள் கெட்டுப் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நிவாரணப் பொருட்களை சென்னை வழியாக பெற்றுக் கொள்ள இலங்கை சம்மதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications