சென்னை: சட்டவிரோத குடியேற்றம்-செக் வாலிபர் கைது
சென்னை: செக் குடியரசில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியர்களை சட்ட விரோதமாக குடியேற்றியதாக அந்நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை அசோக்நகரில் அகூரா நெட்வோர்க்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் முகமது ரபீக். இவர் செக் குடியரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுமார் 29 வாலிபர்களிடம் பணம் வாங்கினார்.
அவர்களை செக் குடியரசை சேர்ந்த நோவாட்னி பிரான்டிசெக் என்ற 30 வயது வாலிபர் மூலம் அந்நாட்டு அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் யாருக்கும் முறைப்படி விசா எதுவும் வழங்கப்படவில்லை என புகார் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் முகமது ரபீக், நாதன், உமர் அசன், சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
அதே நேரத்தில் நோவாட்னி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய சென்னை நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி முதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நோவாட்னி எப்படியும் இந்தியா வருவார் என்று நம்பிய சென்னை போலீசார் அவரை விமானத்தில் வைத்து கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பினர்.
இதையடுத்து கடந்த 24ம் தேதி மும்பை விமான நிலையத்தில் வைத்து நோவாட்னி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இரண்டு வாரம் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications