வேலூர் அருகே யானை மிதித்து பெண் பலி!
வேலூர்: வேலூர் அருகே அப்பாவி பெண்ணை காட்டு யானை துரத்தி காலால் மிதித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது ஜவ்வாது மலைப் பகுதி. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டி யானைகள் உட்பட 9 யானைகள் அப்பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்குள் புகுந்து வயல்வெளிகளை நாசப்படுத்தியுள்ளது.
இதை அறிந்த வனத்துறையினர் கிராம மக்களுடன் சேர்ந்து தீப்பந்தம் மற்றும் முரசு கொட்டி யானை கூட்டத்தை விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் யானைக் கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் கிராமங்க பகுதிகளிலேயே தங்கிவிட்டது.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சின்னவட்டம் கிராமத்திற்கு ஒரு சுப நிகழ்ச்சிக்காக சென்ற 10 பேரை யானைகள் கூட்டம் திடீரென துரத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர்.
அவர்களில் கோவிந்தனின் மனைவி காளியம்மாள் (38) என்பவரை காட்டு யானை ஒன்று காலில் போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்த வனத்துறையினர் காளியம்மாளின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, கிராம மக்களுடன் வனத்துறையினர் இணைந்து காட்டு யானைகள் கூட்டத்தை விரட்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications