சென்னை துறைமுக தொழிலாளர்கள் ஸ்டிரைக்-ரூ. 5 கோடி நஷ்டம்
சென்னை: பணி உயர்வு வழங்க வேண்டும் என கோரி சென்னை துறைமுக தொழிலாளர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று வரை சுமார் ரூ. 5 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
துறைமுகங்களில் வேலை பார்க்கும் தகுதி வாய்ந்த தொழிலாளிக்கு பதவி உயர்வு வாய்ப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசின் வகுப்படுத்தும் கமிட்டி பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை மும்பை, கண்ட்லா, கொச்சின், மங்களூர், விசாகப்பட்டிணம், தூத்துக்குடி, கொல்கத்தா என அனைத்து துறைமுகங்களும் அமல்படுத்தியுள்ளன.
ஆனால், சென்னை துறைமுகத்தில் இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து சென்னை துறைமுகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சிலர் இதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்களது கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து அவர்கள் நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சென்னை துறைமுக டிரஸ்ட் தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
இரும்பு தாதுகளை கையாளும் பகுதியில் இருக்கும் தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இது குறித்து சென்னை துறைமுகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வகுப்படுத்தும் கமிட்டியின் பரிந்துரை ஓராண்டுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தான் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். தற்போது 500 முதல் 600 பேர் வரை வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர் என்றார் அவர்.
ஆனால், இதை சென்னை துறைமுகத்தின் செயல் தலைவர் சுபாஷ் குமார் மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது. சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்துவிடுகின்றன. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் மட்டுமே எதாவது முடிவெடுக்க முடியும் என்றார்.
பின்னர் ஒரு வழியாக நேற்று சங்க பிரதிநிதிகளும், துறைமுக நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரும்பு தாது கையாளும் பகுதி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒவ்வொரு ஏற்றுமதியாளருக்கும் சுமார் ரூ. 1 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டிரைக் காரணமாக தற்போது வரை ரூ. 5 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.