மரக்காணம் அருகே பஸ்கள் மோதல்-5 பேர் பலி
மரக்காணம்: கிழக்குக் கடற்கரைச் சாலையில் மரக்காணம் அருகே இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் பள்ளித் தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சை திருப்புரைமையத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் பஸ்சை ஓட்டினார்.
இன்று அதிகாலை, 3 மணிக்கு மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கூனிமேடு என்ற இடத்துக்கு அந்த பஸ் வந்தபோது திடீரென்று சாலையின் குறுக்கே முதியவர் ஒருவர் நடந்தார்.
இதையடுத்து அவர் மீது பஸ் மோதி விடாமல் தவிர்ப்பதற்காக டிரைவர் மாயகிருஷ்ணன் பஸ்சை வளைத்தார்.
அப்போது நிலை தடுமாறிய பஸ் முதியவர் மீது மோதி, எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விட்டது.
வேகமாக வந்ததால் இரு பஸ்களும் மோதிய வேகத்தில் அருகில் இருந்த வயலில் விழுந்தன.
இந்த கோர விபத்தில் விபத்துக்குக் காரணமான முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் தவிர, ஆம்னி பேருந்தில் பயணித்த, திருத்துறைப்பூண்டியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த எலிசபெத் பாத்திமா ராணி, டிரைவர் மாயகிருஷ்ணன், சிதம்பரம் இதாயதுல்லா, மாயவரம் அருணாச்சலம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
8 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மரக்காணம் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். உடல்களையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications