டாஸ்மாக்கில் போலி 'சரக்கு'-அதிமுக பிரமுகர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கலில் போலி மதுபானம் தயாரித்து டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் நகரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ளது ராமலட்சுமி நகர். இந்த நகரில் உள்ள வீடு ஒன்றில் போலி மதுபானம் தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து டிஎஸ்பி அன்னம், இன்ஸ்பெக்டர் இளங்கோ, எஸ்ஐக்கள் ஜாஸ்மின், மும்தாஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸ் படை அந்த வீட்டை சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த வீட்டில் 280 லிட்டர் எரி சாராயம், 200 காலி குவார்ட்டர் பாட்டில்கள், மூடி பொருத்தும் மெஷின், பிரபல மது வகைகளின் லேபிள்கள், மூடியின் மேல் ஒட்டுவதற்காக வைத்திருந்த போலி அரசு முத்திரை, போலி மது நிரப்பிய 25 குவார்ட்டர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இதற்கு காரணமான பட்டிவீரன்பட்டி நெல்லூரைச் சேர்ந்த கருணாகரன் என்பவரை (43) போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் அதிமுக ஒன்றிய பொருளாளரான இவர் ஏற்கனவே போலி மது தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.