அகதிகள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உத்தரவு
சென்னை: ஈழத் தமிழ் அகதிகளின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தயக்கம் கூடாது. அவர்களை சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஈழ அகதிகள் மறு வாழ்வுக் கழக பொருளாளர் சந்திரஹாசன் கூறுகையில், இலங்கையில் போர் முடிந்து விட்டாலும் கூட, இடம் பெயர்ந்தோர் முகாம்களில் நிலைமை மேம்படாவிட்டால் மேலும் பலர் அகதிகளாக தமிழகம் வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
தற்போது 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியேற அனுமதி தரப்படாமல் உள்ளது. அவர்களை சொந்த ஊர்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா தொடர்ந்து இலங்கையை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரை அதுதொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை.
இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குள் சில பள்ளிகள் இருந்தாலும் கூட அது போதியதாக இல்லை. எந்தவித வசதிகளும் இல்லை. தங்களது பிள்ளைகள் முறையாக பள்ளிப் படிப்பை கற்க வேண்டும் என தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். இதற்காக தமிழகம் வர அவர்கள் நினைக்கலாம். எனவே தமிழகத்தில் உள்ளி பள்ளிக்கூடங்களில் அகதிகளின் பிள்ளைகளை சேர்க்க அனுமதி தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தப் பின்னணியில் கடந்த 29ம் தேதியன்று குற்றாலிங்கம் கல்வித்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியு்ளார்.
அதில், இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைளை பிளஸ்டூ வரையிலான படிப்புகளில் சேர்க்கலாம். அவர்களுக்கு பிறருக்கு வழங்கப்படுவதைப் போல சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மதிய உணவு உள்ளிட்டவை தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.