வெளிநடப்பு: மக்கள் அலுத்துவிடுவார்கள்-கருணாநிதி
சென்னை: சட்டசபையில் தினந்தோறும் எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்தால் அவர்கள் மீது மக்கள் அலுப்படைந்து விடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சிவபுண்ணியம், கடந்த இரண்டு தினங்களாக அவையில் நடைபெறும் நடவடிக்கைகளை பார்த்தால் எதிர்க்கட்சிகள் மீது இந்த அரசுக்கு ஒரு மாறுபட்ட கருத்து இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
வெளியேறும் உறுப்பினர்களை கூட மீண்டும் அவைக்கு வரவழைக்கும் முதல்வரே கூட வெளியேற்ற சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை இருக்கிறது. எனவே எதிர்க்கட்சிகள் குறித்து முதல்வர் என்ன கருதுகிறார் என்றார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில்,
இந்த அவையில் பேசுகிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முதல்வர் அல்லது அமைச்சர்கள் தவறு செய்வதாக சுட்டுக் காட்டினால் அது நம்மை திருத்த பயன்படும் என்கிற அளவிலேயே தான் இந்த ஆட்சி கருதுகிறது.
யாரையும் விரட்ட வேண்டும் என்றோ, மிரட்ட வேண்டும் என்றோ, ஜனநாயகத்தை புறக்கணிக்க வேண்டும் என்றோ நினைக்கிற ஆட்சியாக இது நடைபெறவில்லை.
அவைக்குள் நுழையும்போது நண்பர்களாக நுழைகிறோம். ஆனால் பேசும்போது விரோதிகள் போல் பேச்சு அமைந்து விடுகிறது. இது ஏன் என்று அலுவல் ஆய்வு கூடி ஒரு முடிவு எடுப்பது நன்றாக இருக்கும்.
நாம் இங்கு சட்டசபை தான் நடத்துகிறோம். நாடாளுமன்ற நிலைக்கு இதை கொண்டு போய் விடக்கூடாது. எதிர்க்கட்சிகள் ஒரே நேரத்தில் கோஷ்டி கானம் எழுப்பினால் அது குழப்பத்தில் தான் முடியும். இதை ஆளுங்கட்சிக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்.
எதிர்க்கட்சியினர் குரலை உயர்த்தி பேசும்போது அதற்கு பதிலாக ஆளும் கட்சியினரும் குரல் எழுப்ப கூடாது என்று ஆளுங்கட்சியினருக்கும் எச்சரிக்கையுடனும், எதிர்க் கட்சிகளுக்கு பணிவுடனும் கேட்கிறேன். அவை அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
எதிர்க் கட்சிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் வெளிநடப்பு செய்தால் மக்கள் அலுப்படைந்து விடுவார்கள்.
அடுத்த தேர்தலை மனதில் கொண்டாவது எதிர்க் கட்சியினர் அமைதி காக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications