மாலத்தீவுக்கும் கப்பலில் மணல் கடத்தல்-அதிமுக
அவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் எழுந்து, மணல் கடத்தல் தொடர்பாக கடந்த 17ம் தேதியில் இருந்து இன்று வரை விவாதிக்க அனுமதி கேட்டு வருகிறோம். மணல் கடத்தல் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதோடு மாலத்தீவுக்கும் கப்பலில் செல்கிறது. முக்கியமான இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி வழங்குவாரா என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.
இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், இதுபற்றி அறிவிப்பு கொடுத்து இருக்கிறீர்கள். அது எனது ஆய்வில் உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன் ஒத்திவைப்பு தீர்மானம், கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்தும் விவாதிக்க அனுமதி கிடைக்காததால் இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு அதிமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
அதிமுகவினரை ஆதரித்து மதிமுக எம்எல்ஏக்களுக்கும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து எழுந்த பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, இன்று கடலோர காவல் படையை நவீனப்படுத்தும் திட்டம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கு முதல்வர் பதிலளித்து உள்ளார். அதில் நாங்கள் துணை கேள்வி கேட்க எழுந்தால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிமுகவில் 3 பேருக்கும், காங்கிரசில் 2 பேருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு மட்டும் சபாநாயகர் வாய்ப்பு தரவில்லை. பல முக்கிய பிரச்சினைகள் பற்றி கேட்க எழுந்தாலும் சபாநாயகர் வாய்ப்பு தருவதில்லை. இது வருத்தமாக உள்ளது என்றார்.
இதற்கு சபாநாயகர், உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை. எல்லோரும் பேச வாய்ப்பு கேட்டு கை தூக்குகிறார்கள். அவ்வளவு பேருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது என்பதால் அவ்வப்போது அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கிறோம். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் இல்லை என்றார்.
இதையடுத்து ஜி.கே.மணி, நாங்கள் பலமுறை வாய்ப்பு கேட்டும் பேச அனுமதி தரப்படாததால் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு பாமக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.